பாண்லே பாலகம்.. ரூ.5-க்கு 'செம' சாப்பாடு - 'கிளாப்ஸ்' அள்ளும் ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: பாண்லே பாலகங்களில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தை போல புதுச்சேரியில் கொரோனா தொற்று வீரியமாக பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்தும் விதமாக புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதேநரத்தில், இந்த பெருந்தொற்று நேரத்தில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
தூள் தூளாக சிதறிய "கணக்கு".. செம டென்ஷனில் எடப்பாடியார்.. எனினும் விடாத கடைசி நம்பிக்கை..!
மதிய உணவு
இதன் ஒரு பகுதியாக, இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 10 ரூபாய்க்கு குறைந்த விலையில் மதிய உணவு தரும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இவற்றை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
5 ரூபாய்க்கு உணவு
அதேபோல், பாண்லே பாலகங்கள் மூலம் ரூ.5க்கு குறைந்த விலையில் சுகாதாரமான உணவு வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த முயற்சியின் தொடக்க நிகழ்ச்சி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள பாண்லே பாலகத்தில் இன்று (ஏப்.30 ) நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரூ.5க்கு குறைந்த விலையில் உணவு முறைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். பாண்லே பாலகம் என்றதும் கன்ஃபியூஸ் ஆகிடாதீங்க. 65 ஆண்டுகள் பழமையான பாலகங்கள் இவை. இங்கு பால், தயிர், நெய், மோர், ஐஸ் கிரீம் போன்றவை தான் விற்கப்படும். தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, அரசின் முயற்சியைத் தொடர்ந்து, இங்கு 5 ரூபாய்க்கு உணவு விற்கப்படுகிறது.
நான்கு இடங்களில்
இந்நிகழ்ச்சியில், ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி மகேஸ்வரி, பாண்லே நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஜிப்மர் ஆகிய இடங்களில் உள்ள நான்கு பாண்லே பாலகங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் இந்த திட்டத்திற்கு அளிக்கும் வரவேற்பைப் பொருத்து மேலும் உள்ள பாண்லே பாலகங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,195 பேருக்கு தொற்று
அதேசமயம், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 பெண்கள் உட்பட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 622 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 805 ஆகவும் உயர்ந்துள்ளது.