நாராயணசாமிக்கு இனி நிம்மதி.. விடைபெறப்போகும் கிரண்பேடி.. அடுத்த ஆளுநர் யார்?
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக கர்நாடகாவை சேர்ந்த டாக்டர் ஒருவர் புதுச்சேரிக்கு ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாரயணசாமிக்கும் யாருக்கு அதிகாரம் என்பதில் இருவரும் பதவி ஏற்றதில் இருந்தே மோதல்கள் இருந்து வருகின்றன. இதில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இதனை தொடர்ந்து, இனியாவது கிரண்பேடி தீர்ப்பை ஏற்று மாநில அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர்.

உள்துறை அமைச்சகம் முறையீடு
இந்நிலையில் மேல்முறையீடு செய்ய புதுச்சேரி அரசு பணம் தரமாட்டோம் என்று கூறிய நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கிரண்பேடிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் அமைதியாக இருந்த கிரண்பேடி மீண்டும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அதிகாரிகளிடம் அரசின் செயல்பாடுகளில் தலையிட ஆரம்பித்துள்ளார்.

பார்சல் செய்ய உத்தரவு
நாளை பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் அவரது பதவி ஏற்பு விழாவுக்கு கிரண்பேடி சென்றுள்ளார். ஆளுநர் மாளிகையிலிருந்து கிளம்புவதற்கு முன்னர் புதுவை மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் கிரண்பேடி. புதுவையின் வளர்ச்சிக்கு மேற்கொண்ட பணிகள், எடுத்த முயற்சிகள் குறித்து எழுதியுள்ளார்.

கேரளத்துக்கு செல்வாரா
இதில் தனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார். அதோடு முதல்வர் நாராயணசாமிக்கும், பிரதமருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். பின்னர் ஆளுநர் மாளிகையில் உள்ள பணியாளர்களிடம் மாளிகையில் உள்ள தனது பொருட்களை பார்சல் செய்து வைக்கும்படி கிரண்பேடி கூறியுள்ளார். இதனால் அவர் புதுச்சேரியில் இருந்து மாற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறுகிறார்கள் ஆளுநர் மாளிகையின் உள்விவரம் அறிந்தவர்கள்.

கர்நாடகாவின் புருஷோத்தமன்
புதுச்சேரியில் இருந்து அவர் மாற்றப்படும் சூழலில் அவர் கேரளா அல்லது மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பிருபதாக தெரிகிறது. கிரண்பேடி மாற்றப்படும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணரும் , தீவிர பாஜக ஆதரவாளருமான டாக்டர் புருஷோத்தமன் புதுவை ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications