2 அமைச்சர்கள் டார்ச்சர் பண்றாங்க முதல்வருக்காக பார்க்கிறேன்.. புதுச்சேரி MLA சந்திரபிரியங்கா புகார்
புதுச்சேரி: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் 2026 சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரம், வாக்குவாதம் என்று இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டனர். இதேபோல புதுச்சேரியிலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசியலில் சுனாமியே ஏற்படுமளவுக்கு சந்திரபிரியங்கா எம்எல்ஏ 2 அமைச்சர்கள் தொந்தரவு செய்வதாக பகீர் புகார் வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி புதுச்சேரி அரசியலில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
புதுச்சேரி முன்னாள் அமைச்சராகவும், நெடுங்காடு தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர் சந்திரபிரியங்கா. ஆளுங்கட்சி எம்எல்ஏவான அவர் நேற்று தன் சொந்த கட்சியின் அமைச்சர்கள் குறித்து தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் சுமார் 30 நிமிட நீளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "பொது இடத்தில் மக்களுக்கு இடைஞ்சலாக பேனர் வைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையும் மீறி அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பேனர் வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அமைச்சர்கள் மீது சந்திரபிரியங்கா புகார்
இதுதொடர்பாக சமீபத்தில் காவல்துறையினர் எனக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். நானும் ஆஜராகி விளக்கம் கொடுத்தேன். இதை விசாரித்தபோது, பொருளாதார பின்னணி இல்லாத ஒருவர் இவ்வளவு செலவு செய்து வழக்கு தொடர்ந்துள்ளார். அவரின் பின்னணியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நான் அமைச்சராக இருந்தபோதே ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளேன். இதெல்லாம் என்னிடம் வேண்டாம்.
நம்பி வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஒதுங்கியுள்ளேன். அப்போதும் அவர்களின் சுயநலத்திற்காக, உள்நோக்கத்துடன் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவில்லை என்பதற்காக ஒரு பெண்ணை இவ்வளவு கொடுமை செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். சமீப காலமாகவே டார்ச்சர் அதிகமாக உள்ளது. அரசியல்வாதிக்கு டார்ச்சர் கொடுக்கலாம். எவ்வளவு பிரச்சனைகள், டார்ச்சர்கள் வந்தாலும் எப்படி சமாளிக்க வேண்டும் என்று என் அப்பா சொல்லிக் கொடுத்துள்ளார்.
உங்க கட்டுப்பாட்டிற்கு வரவில்லை என்பதற்காக
அதற்காக உடன் இருப்போருக்கு டார்ச்சர் கொடுப்பதை ஏற்க முடியாது. அவர்களை பாதுகாக்க வேண்டும். அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு. இன்று வரை எனக்கு டார்ச்சர் தொடர்கிறது. எல்லோரும் அப்படியில்லை. ஒன்று இரண்டு அமைச்சர்கள் தான். அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்பதற்காக எம்எல்ஏவாக இருந்தாலும் டார்ச்சர் செய்கின்றனர். இதுவே ஒரு ஆண் எம்எல்ஏவாக இருந்தால் இப்படி டார்ச்சர் செய்வார்களா.
இனிமேலாவது திருந்தி வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள். ஒரு பெண் அரசியலில் இருக்க கூடாது. வேண்டாம்பா சாமி என்று அரசியலை விட்டு விலகுவதற்காக இப்படி டார்ச்சர் செய்கிறீர்கள். இதை வெளிப்படுவத்துவதற்காக தான் வீடியோ வெளியிட்டுள்ளேன். இதுதொடர்பாக அதிகாரியிடம் புகார் அளித்திருக்கிறேன். அதற்கு அவர், பாதுகாப்புக்காக உங்கள் சொத்துகளை வேறு பெயருக்கு மாற்றுங்கள் என்கிறார். எந்தளவுக்கு அவருக்கு மேலிருந்து உத்தரவு வந்துள்ளது.
முதல்வருக்காக..
எனக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது. முதல்வருக்காக தான் உங்கள் பெயரை கூறாமல் இருக்கிறேன். முதல்வரை தந்தை ஸ்தானத்தில் வைத்துள்ளேன். அவர் தான் என்னை தேர்தல் வேலையை பாரு. இதை காதில் வாங்காதே என்று அறிவுறுத்தினார். அவரும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறார். வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள். தேர்தல் வேலையை பாருங்கள். நீங்களும் வாழுங்கள். என்னையும் வாழ விடுங்கள்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications