முதல்வர் பேச்சை கூட கேட்கலையே.. பாஜக வேட்பாளர் கண்முன்னே வாழைக்காய்க்கு சண்டையிட்ட மக்கள்!
புதுச்சேரி: பிரசாரத்துக்கு வந்த பாஜக வேட்பாளர் பேசி கொண்டிருந்தபோதே அதனை கவனிக்காமல் அவரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டு இருந்த வாழை மரத்தில் இருந்து வாழை குலைகளை போட்டிப்போட்டு அக்குஅக்காக பிய்த்து எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தை போல் புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரங்கசாமி உள்ளார். இந்நிலையில் தான் புதுச்சேரி லோக்சபா தொகுதியிலும் தமிழகத்தை போல் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.

புதுச்சேரி எம்பியாக தற்போது காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கம் உள்ளார். இவர் மீண்டும் திமுக கூட்டணி சார்பில் புதுச்சேரியில் களமிறங்கி உள்ளார். அதேபோல் பாஜக சார்பில் அமைச்சர் நமாச்சியம் போட்டியிடுகிறார். இதுதவிர அதிமுக சார்பில் தமிழ் வேந்தன், நாம் தமிழர் சார்பில் மேனகா போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர்களை வரவேற்க கட்சி நிர்வாகிகள் வாழை மரங்களை வரிசையாக வைத்திருந்தனர். இந்த வேளையில் புதுச்சேரி முதல்வர் ரங்சாமி, பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு ஆதரவாக பேசி ஓட்டு சேகரித்தார்.
ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரது பேச்சை கவனிக்கவில்லை. மாறாக அவர்களை வரவேற்க வைக்கப்பட்டு இருந்த வாழை மரத்தின் வாழை குலையின் மீது தான் கண்கள் இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவர்கள் பேச்சை முழுமையாக கேட்காமல் வாழை மரத்தில் இருந்த குலையில் இருந்து ஒவ்வொரு வாழைக்காய்களை பறிக்க தொடங்கினர். வாழைக்குலையை பறிக்க கூட்டம் கூடியதால் பொதுமக்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டது.
இதனால் அவர்கள் வாழைக்குலையை முழுவதுமாகவும், சிலர் வாழைக்காய்களையும் பிய்த்து எடுத்து சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications