ஆட்டையை கலைத்த அமித்ஷா... "சாமி" வாக்கிற்காக காத்திருக்கும் புதுச்சேரி அரசியல்
புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மாதம் வரை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. பதவி காலம் முடிய 2 மாதங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.,வான நமசிவாயத்தை வைத்து பாஜக நகர்த்திய காயில் கடைசி நிமிடத்தில் ராஜினாமா செய்யும் நிலைக்கு நாராயணசாமி தள்ளப்பட்டார்.
அடுத்தடுத்த எம்எல்ஏ.,க்களின் ராஜினாமாவால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி அரசு, தானாகவே கவிழ்ந்து விட்டது. இதனால் புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க காட்டிய வேகத்தை, கூட்டணி அமைப்பதில் காட்ட பாஜக தவறவிட்டது.

அமைதி காக்கும் ரங்கசாமி
நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததும் அதிக எம்எல்ஏ.,க்களை வைத்திருந்த முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை ரங்கசாமி செய்யாததால், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கூட்டணிக்கும் மவுனம் தான்
ரங்கசாமியின் ஆதரவை பெற திமுக, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் இதுவரை யாருக்கும் ரங்கசாமி ஓகே சொல்லாமல் இருந்து வருகிறார். புதுச்சேரியிலும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை இழுபறியே காணப்படுகிறது.

ஆட்டையை கலைத்த அமித்ஷா
பாஜக மற்றும் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவே ரங்கசாமி முதலில் திட்டமிட்டுள்ளார். ஆனால் பிப்ரவரி இறுதியில் புதுச்சேரி சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, பொதுக்கூட்டத்தில் பேசுகையில், புதுச்சேரியில் பாஜக தலைமையில் தான் ஆட்சி அமையும் என பேசினார். இதனால் கடுப்பான ரங்கசாமி, பாஜக.,வுடன் கூட்டணி வைக்கும் முடிவை கைவிட்டதாக தெரிகிறது.

ரங்கசாமியின் செல்வாக்கு
2011 ல் காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அக்கட்சியில் இருந்து விலகிய ரங்கசாமி, என்ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு பாஜக.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார். இதுவரை 12 ஆண்டுகள் புதுச்சேரி முதல்வராக இருந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர் என பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார். அத்துடன் சாலையோரக் கடையில் டீ குடிப்பது, அவ்வப்போது சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரில் வலம் வருவது போன்ற செயல்களால் எளிமையான முதல்வர் என்ற பெயரை மக்களிடம் பெற்றுள்ளார்.

ஜெயலலிதாவையே எதிர்த்த ரங்கசாமி
மோடியா, லேடியா என கேட்டு மத்திய அரசை நேரடியாக எதிர்த்தவர் ஜெயலலிதா என்றால், அவரையே எதிர்த்தவர் ரங்கசாமி. 2016 சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியையும், ஆதரவையும் ஏற்க ஓகே சொன்ன ரங்கசாமி, ஆட்சியில் பங்கு தர முடியாது ஜெயலலிதாவிடமே நேரடியாக சொன்னார் ரங்கசாமி.

ரங்கசாமியின் தற்போதைய திட்டம் என்ன
தனது சொல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும் என்பதே ரங்கசாமியின் திட்டமாக உள்ளது. கூட்டணி இல்லாமல், செல்வாக்கு மிகுந்த தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கவே ரங்கசாமி விரும்புகிறார். இருந்தாலும் அதிமுக.,வை மட்டும் கூட்டணியில் சேர்த்து கொள்ளலாமா என ரங்கசாமி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ரங்கசாமி முடிவுக்காக காத்திருக்கும் கட்சிகள்
தனித்து போட்டியா, யாருடன் கூட்டணி என ரங்கசாமியின் அறிவிவிப்பிற்காக அரசியல் கட்சிகள் மட்டுமல்ல புதுச்சேரியின் ஒட்டுமொத்த அரசியல் களமே காத்துகிடிக்கிறது. ரங்கசாமியின் அறிவிப்பை பொறுத்தே மற்ற கட்சிகளின் கூட்டணியும் இறுதியாகும் என்ற நிலை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications