புதுச்சேரியில் 18 வயதுக்கு கீழ் வாகனம் ஒட்டினால் பெற்றோருக்கு சிறை.. லைசென்ஸ் எடுப்பதிலும் சிக்கல்
புதுச்சேரி: புதுச்சேரியில் 18 வயதிற்கு உட்பட்டோர் வாகனம் ஒட்டி பிடிபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறை கூறியுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு 3 வருடங்கள் சிறை, ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது. வண்டி ஓட்டும் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதிலும் காவல்துறை செக் வைத்துள்ளனர்.
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகளவு நடைபெறுகின்றன. அதிவேகம், மதுபோதையில் வாகனங்களை இயக்குதல் போன்றவை முக்கிய பிரச்சனையாக உள்ளது. 18 வயதை பூர்த்தியடைந்தால் தான் ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஆனால் 18 வயதிற்குட்பட்ட பலரும் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதற்கு புதுச்சேரி அரசு அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளது.

காவல்துறை விழிப்புணர்வு
புதுச்சேரி முதுநிலை போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "ஓட்டுநர்கள், நடைபயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதுச்சேரி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி குறைந்து வயதினர் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்தோம்.
குறைந்த வயதில் வாகனங்களை ஓட்டுவதால் அதிகளவு சிக்கல்கள் ஏற்படுவது தெரியவந்தது. குறைந்த வயதில் வாகனம் ஓட்டுபவர்கள் முதிர்ச்சி, பயிற்சி, சட்டபூர்வ அனுமதியில்லாமல் விபத்து ஏற்படுத்துகிறார்கள். பொது மக்கள் பாதுகாப்பும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து துறை இதுதொடர்பாக பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
குறைந்த வயதினர் வாகனம் ஓட்டினால் தண்டனை
ஆனாலும் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் சிறு வயதினர் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கிறார்கள். இதன் காரணமாக குறைந்த வயதினர் உயிர் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மோட்டார் வாகன சட்டம் 199ஏ கீழ் குறைந்த வயது வாகனம் ஓட்டுதல் கடுமையான குற்றம் மற்றும் சட்டவிரோதமாகும்.
குறைந்த வயதுடையவர்கள் வாகனம் ஓட்டும்போது பிடிபட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் அல்லது பெற்றோர் குற்றவாளியாக வழக்குப்பதியப்படும். அவர்களுக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். முக்கியமாக அவர்களின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும். எனவே பெற்றோர், வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதிரடி நடவடிக்கை
மேலும் வாகனம் ஓட்டும் குறைந்த வயதினர் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அவர்களின் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவும் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். கடந்த 3 நாட்களில் மட்டும் குறைந்த வயது வாகனம் ஓட்டுதல் வழக்கில் 30 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications