மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்.. முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார்
புதுச்சேரி: மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழ்நாட்டிலுள்ள பல லட்ச விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
இந்த அணையைக் கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாகத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, அங்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார்.
இருப்பினும் கர்நாடக அரசு அணை கட்டுவது உறுதி என்றே தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாகக் குற்றஞ்சாட்டிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மிக விரைவில் மேகதாதுவில் அணைக் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.
மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி அரசும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.
தமிழகத்தில் இன்று 1523 பேருக்கு கொரோனா.. கோவை உட்பட இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே 100+ பாதிப்பு
அதில் "மேகதாதுவில் அணைக் கட்டினால் காரைக்காலுக்குக் கிடைக்கும் 7 டிஎம்சி தண்ணீர் கிடைக்காது. எனவே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை குறித்த விவாதத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று அந்த தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபையில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது