கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் அதிமுகவில் இருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். புதுச்சேரியில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார்.
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாளை மார்ச் 23ஆம் தேதியோடு அதற்கான அவகாசம் நிறைவடைகிறது.

புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ் - பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணியும், திமுக - காங்கிரஸின் கூட்டணியும் அமைந்துள்ளது. என்.டி.ஏ. கூட்டணியில், பாஜக, என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, லஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 16; பாஜக 10; அதிமுக 2; லஜக 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
புதுச்சேரியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
உப்பளம் தொகுதியில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் புதுச்சேரி அதிமுக முன்னாள் துணைச் செயலாளர் காந்தி ஆகியோர் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதனிடையே புதுச்சேரி தேர்தலில் தமக்கு போட்டியிட வாய்ப்பு தராததால் புதுச்சேரி மாநில அதிமுக துணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸில் வையாபுரி மணிகண்டன் இணைந்துள்ளார்.
வையாபுரி மணிகண்டன், அதிமுகவில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தார். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தொகுதி மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது, ஆதரவு திரட்டுவது என வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் 2 சீட் மட்டுமே அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், வையாபுரி மணிகண்டனுக்கு சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து, அதிருப்தி அடைந்த அவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்துள்ள அவர், இதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளார்.
அதிமுக மாநிலத் துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று அதிமுகவில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக நிர்வாகி, கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது புதுச்சேரி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications