எங்க எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்யுங்க.. அரசு கொறடா கோரிக்கை.. புதுவையில் பரபரப்பு
புதுச்சேரி: தொடர்ந்து ஆட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பாகூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். மேலும் நேற்றைய தினம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் அளித்திருந்தார். இதேபோல் ஊழல் பட்டியலை டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அளிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, ஜான்குமார் தீப்பாய்ந்தான், விஜயவேனி ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தனர். அந்த கடிதத்தில், தொடர்ந்து ஆட்சிக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அரசு கொறடா, சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்து இருப்பது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடிதம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு கொறடா அனந்தராமன், கட்சி மற்றும் ஆட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும், மேலும் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க எதிர் கட்சிகளோடு கைகோர்த்து சதி வேலையில் ஈடுபட்டதால் தனவேலுவை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நமச்சிவாயம், காங்கிரஸ் கட்சியின் தலைமையின் ஒப்புதலோடு தற்காலிகமாக தனவேலு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளதால், அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அரசு கொறடா கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஊழல் புகார்கள் குறித்து தனவேலு ஆதாரத்துடன் நிரூபித்தால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
கடிதத்தை பெற்றுக்கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சிவகொழுந்து, சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஏற்கனவே அரசு கொறடா கடிதம் அளித்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று மீண்டும் கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அனுப்பிய பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications