மீன் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லலாமா.. செய்தியாளரின் கேள்விக்கு தமிழிசை அளித்த பதில் என்ன?
புதுச்சேரி: மீன் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு செல்லலாமா என செய்தியாளரின் கேள்விக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார்.
புதுவையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த விழாவுக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அது போல் புதுவை முதல்வர் ரங்கசாமியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்திரராஜன் புதுவையில் மீனாட்சி ஆட்சி நடைபெறுகிறது. மீனாட்சி எப்படி ஆட்சி புரிவாள் என்றால் முட்டை இட்டு கண்களில் வைத்து குஞ்சு பொறித்து வளர்ப்பது போல் ஆட்சி புரிவாள்.
அது போல்தான் மத்திய அரசு தொலைவில் இருந்தாலும் மக்களை கண்ணில் வைத்து பாதுகாத்து வருகிறது. மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமலும் இருக்கலாம். ஆளுநர் மாளிகையில் மேற்கு வங்க நாள் கொண்டாடப்பட்ட போது மீன் சமைக்கப்பட்டது.
அப்போது அவர்கள் நாங்கள் மீனை அசைவம் என நினைப்பது இல்லை. சைவம் என்றுதான் நினைக்கிறோம் என மேற்கு வங்கத்தினர் தெரிவித்தனர். அப்படி மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயனடைவார்கள். இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் பேசியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்தன.
பொதுவாக மக்கள் மீன், இறைச்சி சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்வதில்லை. அந்த வகையில் மீனை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லலாமா என நேற்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர் தமிழிசை சிரித்துவிட்டு, அது அவரவர் விருப்பம், எண்ணம் சார்ந்த விஷயம்.

நான் கோயிலுக்கு போகும் போது மீன் சாப்பிடுங்கள் என சொல்லவில்லை. மீனில் ஒமேகா உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அதனால் அதை சைவத்தில் சேர்க்கலாம் என சொன்னேன். மற்றபடி யாரையும் கட்டாயப்படுத்த தேவையில்லை. விருப்பப்படுவோர் மீனை சாப்பிட எண்ணும் போது அது அசைவ உணவு என்பதாலேயே சாப்பிடுவதில்லை.
இதே சைவத்திற்கு மீனை மாற்றிவிட்டால் நிறைய பேர் சாப்பிட்டு உடல்நலம் பெறுவர். அந்த எண்ணத்தில்தான் நான் சொன்னேன். மேலும் முட்டையை சைவமாக்கியதால் அதை சைவர்கள் பலரும் சாப்பிடுகிறார்கள். மேற்கு வங்கத்தில் மீனை கடல் பூக்கள் என அழைக்கிறார்கள் என்றார். உங்களுக்கு எந்த மீன் பிடிக்கும் என செய்தியாளர் கேட்டதற்கு எனக்கு எல்லா மீனும் பிடிக்கும்.. மீம்ஸும் பிடிக்கும் என அடுக்குமொழியில் பதிலளித்துவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications