மக்கள் விழிப்புணர்வோடு இருக்கும்போது விநாயகர் சதுர்த்தி சிலைகளுக்கு தடை ஏன்? ஆளுநர் தமிழிசை கேள்வி
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான, தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதால் விநாயகர் சிலைகள் வைக்க தடை தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை, பொது இடங்களில் கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்க வேண்டும் என்பது பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கோரிக்கையாக இருக்கிறது. தடை தொடர்ந்தால் அதை மீறி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மக்கள் கூடி கொண்டாட தளர்வு
இந்த விஷயம் சட்டசபையில் கூட இன்று எதிரொலித்தது. இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இன்று பேசிய நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ காந்தி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது சரி கிடையாது என்றும், அனைவரும் கூடி கொண்டாடுவதற்கு தளர்வுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சேகர் பாபு பதில்
இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து பேசுகையில், விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதித்து கொண்டாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். எனவே, மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தான் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

தெலுங்கானா, புதுச்சேரியில் அனுமதி
இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம், தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை என்று, அறிவிக்கப்பட்டுள்ளதே, புதுச்சேரியில் அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அடுத்த மாநில முடிவை பற்றி நான் விமர்சிக்கவில்லை. ஆனால், தெலுங்கானாவில் எல்லா இடத்திலும் சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.

மக்கள் விழிப்புணர்வோடு உள்ளனர்
புதுச்சேரியில் மக்கள் விழிபுணர்வோடு இருக்கும் போது அரசு அதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என்ற அவர், அதனால், விநாயகர் சிலை வைக்க எந்த தடையும் இல்லை எனவும் தெலுங்கானாவில் ஏற்கனவே உயரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை அதே போல் தான் புதுச்சேரியிலும் உள்ளதாக கூறிய தமிழிசை, கட்டுப்பாட்டோடு மக்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ள நிலையில் மக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications