நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்ப முழு அதிகாரம் உள்ளது.. ஆளுநர்கள் திறமைசாலிகள் தான் - தமிழிசை
புதுச்சேரி : நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிராக ஆளுநர்கள் இருப்பார்கள் என்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர் என தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான வாதம் அதிகமாகி வருகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் விலக்கு மசோதா
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டசபையில் அனைத்து கட்சியினரும் ஒருமனதாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எவ்வித முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்திற்கு தீர்மானத்தை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தியும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன்
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி செல்வதாகவும் 9ஆம் தேதி மீண்டும் அவர் தமிழகம் திரும்புவார் என ஆளுநர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நிலையில் ஆளுநரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை திரும்ப அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களில் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஆளுநருக்கு அதிகாரம்
புதுச்சேரியில் முத்துமாரியம்மன் ஆலய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளரிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வீட்டு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவித்தார். மேலும் ஆளுநர் சில கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார் எனவும் தமிழக சபாநாயகர் மீண்டும் இது குறித்து முடிவெடுக்கலாம் என கூறினார் . மேலும் ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக அவர்கள் ஈடுபடுவார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக கூறிய தமிழிசை, இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநர்களுமே திறமைசாலிகள் தான் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications