புதுவையில் சுவாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு
புதுவை: புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கோவிலில் சுவாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Recommended Video
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் வீதியில் அமைந்துள்ளது துலுக்காணத்தம்மன் கோவில். இந்தக் கோவிலில் துர்க்கை அம்மன், முருகன், விநாயகர் உட்பட பல்வேறு சிலைகள் உள்ளன.

இந்நிலையில் கோவிலுக்கு வந்த பூசாரி அங்கிருந்த துர்க்கை அம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்ததை அறிந்த அவர் உடனடியாக கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக கோவிலுக்கு வந்த நிர்வாகிகள் இதுகுறித்து முத்தையால்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் கோவிலுக்குள் சென்று சேதமடைந்த சிலைகளை பார்வையிட்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை மேற்கொண்டனர்.
அதில் மூன்றுக்கு மேற்பட்ட மர்மநபர்கள் கோவிலுக்குள் நுழைவதும் பின்பு திரும்பி வருவதும் பதிவாகியிருந்தது. இதனைக் கொண்டும் மற்றும் சிசிடிவி காட்சிகளை கொண்டும் கோயில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை முத்தியால்பேட்டை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நகரப் பகுதிக்குள் உள்ள கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து சிலைகளை சேதப்படுத்திய விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மதுபோதையில் சிலைகளை சேதப்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏதாவது திருட வந்து எதுவும் இல்லாததால் இது போல் சிலைகளை சேதப்படுத்தியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
அது போல் மத கலவரத்தை ஏற்படுத்த இது போல் யாரேனும் செய்துள்ளனரா என்பதையும் விசாரித்து வருகிறார்கள். கோயில்களில் உண்டியல் உடைப்பு, சிலைகள் சேதம் உள்ளிட்ட சம்பவம் அதிகம் நடைபெற்று வருவதால் இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்தால் மட்டுமே அவர்கள் எந்த நோக்கத்திற்காக சிலையை சேதப்படுத்தினார்கள் என்ற விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications