வீட்டிற்குள் விரியன் பாம்பு..விஷமேறிய நிலையில் எஜமான் குடும்பத்தைக் காப்பாற்றிய நாய்-திக்திக் காட்சி
புதுச்சேரி : புதுச்சேரியில் இரவில் வீ்ட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை வீட்டில் வளர்த்த வெளிநாட்டு ரக நாய்கள் பாம்பை கடித்து கொன்று எஜமானரின் குடும்பத்தையே காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், வளர்ப்பு நாயை கடவுள் என அந்த குடும்பத்தினர் புகழ்ந்து வருகின்றனர்.
Recommended Video
தமிழகத்தில் தற்போது பின்பனிக்காலம் நிலவி வரும் நிலையில் பகல் நேரங்களில் கடும் வெயிலும் இரவு நேரங்களில் கடும் பனி பொழிந்து வருகிறது.
இதன் காரணமாக பாம்பு உள்ளிட்ட பிராணிகள் கதகதப்பை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

புதுச்சேரியில் நெகிழ்ச்சி
இந்த நிலையில் புதுச்சேரியில் வீட்டிற்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை வீட்டில் வளர்த்த நாய்கள் கடித்து குதறி கொன்று தன் குடும்பத்தைக் காப்பாற்றிய நிகழ்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் டீச்சர்ஸ் காலனி ரோஜா நகரில் வசித்து வருகின்றார் அரசு கல்வித்துறை அதிகாரி ரமணி. இவரது மனைவி சித்ரா காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ராட்வீலர் நாய்கள்
இவர்களது வீட்டில் வெளிநாட்டு வகை நாய்களான ராட் வீலர் வகையை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வந்தனர். நாய்களுக்கு லெனி, மிஸ்ட்டி என பெயரிட்டு அழைத்தனர். இந்தநிலையில் மிஸ்ட்டி என்ற நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ரமணி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அந்த நாய்க்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தும் நாய் சோர்வுடனே இருந்து வந்தது. இந்தநிலையில் ரமணி தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கு சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு செத்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கண்ணாடி விரியன் பாம்பு
அப்போது வீட்டுக்குள் செல்ல முயன்ற அந்த பாம்புடன் மிஸ்ட்டி போராடி கொன்று இருப்பதும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால் நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணமும் அப்போது தான் அவருக்கு தெரியவந்தது. உடனே அந்த நாயை புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது நாய் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்குள் செல்ல முயன்ற பாம்புடன் இரண்டு நாய்களும் சண்டையிட்டு பாம்பை கடுத்து கொன்று தூக்கி செல்லும் சிசிடிவி பதிவாகியிருந்தது.

கடவுள் என நெகிழ்ச்சி
தனது உயிரையும் பொருட்படுத்தாமல் வீட்டுற்குள் செல்ல இருந்த பாம்பிடம் போராடி பாம்பை கடித்து குதறி சாகடித்து தன்னை வளர்த்த உரிமையாளர்களின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ பாம்பிடம் இருந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் வளர்த்த எங்களை காப்பாற்ற பாம்பிடம் சண்டையிட்டு காப்பாற்றிய எங்களது கடவுள் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications