மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு.. புதுவையில் வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அருகே கிராமப்பகுதியில் விவசாயிகள் கருப்புக்கொடியுடன் நெல் வயல்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தை சீர்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்திருந்தார்.

மின்துறையை தனியார் மயமாக்கும் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. மேலும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழைகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், தொழிற்சாலைகளுக்கு மின்சார கட்டணத்தில் சலுகை இவை எல்லாம் எங்களுடைய அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.
நாங்கள் மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிலையை மாநில அரசின் கையில் வைத்துள்ளோம். இதனை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இதுசம்பந்தமாக மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாதென வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி அடுத்த சந்தைபுதுக்குப்பம் கிராமத்தில் விவசாயிகள் கருப்பு கொடியுடன் நெல் வயல்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
தற்போது இலவச மின்சாரம் பெறும் நிலையிலேயே விவசாய பயிர்கள் பெருமளவு பாதித்து, நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. எதிர்காலங்களில் விவசாயம் தழைக்குமா? என்ற கேள்வியும் இருந்து வருகிறது. எனவே மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications