வண்டில உட்காரும்மா.. பார்த்து பிடிச்சுக்கோ.. சபாஷ் செண்பகவல்லி.. குவியும் பாராட்டுகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் தனது கைகுழந்தையுடன் இரண்டு மூட்டைகளை தூக்கிகொண்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, பணியில் இருந்து பெண் காவலர் ஒருவர், உணவளித்து தனது இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஒரு சிலர் போலீசார் செய்யும் தவறான செயல்களால், ஒட்டுமொத்த காவல்துறை மீதும் பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை இருப்பதில்லை. போலீஸ் என்றாலே முடுக்கான உடையணிந்து, எப்போதும் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்றுதான் பலருடைய எண்ணம்.
ஆனால் காக்கிகளுக்குள்ளும் குழந்தை மனம் இருக்கிறது. அவர்களுக்கும் பாசம், நேசம் என அனைத்தும் உண்டு என்பதை ஒரு சிலர் போலீசாரின் செயல் மூலம் அவ்வப்போது நிரூபணமாகி வருகிறது.

நல்லுள்ளங்கள்
இதுபோன்ற நல்ல உள்ளம் படைத்த சில காவலர்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த நல்லதை செய்து ஒட்டுமொத்த காவல்துறைக்கும் நற்பெயரை பெற்றுத் தருகிறார்கள். சமீபத்தில் கூட புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட, அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த கருணாகரன் என்ற காவலர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு, அந்த கர்ப்பிணியை தன் சகோதரியை போல் பாவித்து, மருத்துவமனையில் சேர்த்தார்.

அழகான ஆண் குழந்தை
உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அந்த பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதேபோல் ஜிப்மர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண்ணுக்கு, ஆயுதப்படை காவலர் செல்வம் மூலம் உரிய நேரத்தில் அரிய வகை ரத்தமான பாம்பே ஓ பாசிட்டிவ் இரத்தம் ஏற்பாடு செய்யப்பட்டதால், அந்த பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. அந்த வரிசையில் தற்போது மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

காவலர் செண்பகவல்லி
கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், புதுச்சேரி ராஜீவ் காந்தி சிக்னல் அருகில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது
கைக்குழந்தையுடன், இரு மூட்டைகளை தோளில் சுமந்து தடுமாறியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் செண்பகவல்லி, மாற்றுத்திறனாளி பெண்ணை கைத்தாங்கலாக, தாங்கிக் கொண்டும், அவரின் ஒரு கை பையை சுமந்து கொண்டும் அந்த பெண்ணை சிக்னலை கடக்க செய்தார்.

டூவீலரில் லிப்ட்
பின்னர் அந்த பெண்ணிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என விசாரித்துள்ளார். அந்த பெண் நேரு வீதி மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறினார். இதையடுத்து காவலர் செண்பகவல்லி, அந்த பெண்ணையும், அவரது குழந்தையையும் சாலையோரம் அமர வைத்து, தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உணவை அவர்களுக்கு கொடுத்து சாப்பிட வைத்தார். பின்னர் ஊரடங்கால் வாகன வசதி இல்லாத காரணத்தினால், சக காவலர் ஒரு உதவியுடன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அந்த பெண்ணையும், குழந்தையையும் ஏற்றிகொண்டு, அவர் சேர வேண்டிய இடத்திற்கு பத்திரமாக கொண்டு சேர்த்தார்.

குவியும் பாராட்டு
செண்பகவல்லியின் செயலை அவருக்கு தெரியாமலேயே அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காவலர் செண்பகவல்லியின் இந்த செயலை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனிதநேயம் பல்வேறு வடிவங்களில் வெளிவருவதை நம்மால் மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications