புதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Recommended Video
புதுச்சேரி: முதல்வருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்புக்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், ஜனநாயகம் வென்றுள்ளதாவும், உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீர்ப்பு வந்தவுடன் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். மேலும் சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழை நீர் சேகரிப்பு
இதற்கிடையே, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு மாநில அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டப்பட்டது.
இதனை முதலமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மழை நீர் சேகரிப்பு அமைப்பை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதேபோல், புதிதாக வீடு கட்டுபவர்கள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தாவிட்டால் வீடுகட்ட அனுமதி அளிக்க முடியாது என்றார். மேலும், புதுச்சேரி அரசு பிரான்ஸ் நாட்டு அரசின் நிதி உதவியுடன் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.