திருநள்ளாறு கோயில் பக்தர்களுக்கு விபூதி அடித்த கும்பல்.. முன்பதிவில் கோடிக்கணக்கில் மோசடி! ஷாக்
புதுவை: மிகவும் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலின் பெயரில், போலியாக இணையதளம் தொடங்கி அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி எப்படி நடந்தது, இதில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவில் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
புதுவை மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நவக்கிரக கோயில்களில் ஒன்றான திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இணையதளம் மூலம் புக் செய்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதற்காக திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில், முக்கிய பூஜைகள், தரிசனம் எப்போது நடைபெறும், சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் போன்ற விவரங்கள் அப்டேட் செய்யப்படும். இதற்கு ஏற்றவாறு நாம் அதில் புக் செய்துகொண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியும்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இணையதளத்தில் பதிவு செய்ததாக பக்தர்கள் சிலர் திருநள்ளாறு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருக்கின்றனர். அப்போது கோவில் நிர்வாகிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. நீங்கள் பதிவு செய்திருந்தால் தான் உள்ளே அனுமதிக்க முடியும் என்று கூறினர். உடனே அந்த பக்தர்கள் இணையத்தில் பதிவு செய்திருந்த ரசீதை காண்பித்தனர்.
இதை பார்த்த கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடி குறித்து திருநள்ளாறு கோவில் நிர்வாகத்தினர் சைபர் கிரைம் போலீசில் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் தேவஸ்தானத்தின் இணையதளம் பக்கம் போலவே அச்சு அசலாக போலி இணையதள பக்கம் ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் அந்த இணையதள பக்கத்தில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பற்றியும், இங்கு என்னென்ன வழிபாடுகள் நடக்கும் என்பது குறித்து ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதேபோன்று சாமி தரிசனம் செய்வதற்கு, அர்ச்சனை செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு என அனைத்திற்கும் குறிப்பிட்ட அளவு தொகை வசூல் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக சனிக்கிழமை நடைபெறும், அஷ்டோத்ரா அர்ச்சனைக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பக்தர்களும் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி புக்கிங் செய்திருந்தது தெரியவந்தது.
மேலும் அபிஷேகம் நடைபெறுவது, சிறப்பு பூஜைகள் நடைபெறுவது உள்ளிட்ட வீடியோ காட்சிகளும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக வெளி மாநிலங்கள், வெளி நாட்டு பக்தர்களை குறிவைத்தே இந்த மோசடி நடந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த போலி இணையதளம் செயல்பட்டு வந்ததும், இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார், உள்ளூர் நபர்கள் தான் இந்த மோசடியை செய்துள்ளனரா? என்ற பல்வேறு கோணத்தில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications