ஆம்பன் புயல் எதிரொலி.. புதுச்சேரி அருகே கடல் சீற்றம்.. மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன!
புதுச்சேரி: ஆம்பன் புயல் காரணமாக புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், மீனவர்களின் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் 5 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
Recommended Video
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் மீனவர் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இங்கு அவ்வபோது கடல் சீற்றத்தின்போது மண் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையை ஒட்டிய வீடுகள் இடிந்து விழுவது வழக்கம். சுனாமி தாக்கியபோது இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, மீனவர்கள் பாதுகாப்பாக குடியிருக்க மேடான பகுதியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. அங்கு தற்போது மீனவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையை ஒட்டியுள்ள ஏற்கனவே மீனவர்கள் வசித்துவந்த பயனற்ற வீடுகள் அவ்வப்போது இடிந்து வருகின்றன. மேலும் இந்த பகுதி மீனவர்கள் படகுகளை நிறுத்த இடமின்றியும், மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக வைக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

அதேபோல் கடல் அரிப்பால் நல்ல நிலையில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கவேண்டுமென அப்பகுதி மீனவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் அரசு இதுவரை தூண்டில் வளைவு அமைத்து தரவில்லை.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி மற்றும் அருகே உள்ள தமிழக பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வந்தது. கடல் சீற்றம் காரணமாக பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் சேகர், ராமலிங்கம் உள்ளிட்ட மூன்று பேரின் பயனற்ற வீடுகள் இடிந்து விழுந்தன.

அங்கு யாரும் வசிக்காததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் அப்பகுதியில் 5 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன. இதையடுத்து பொம்மையார்பாளையம் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications