புதுச்சேரியில் இனி இந்தி கட்டாயம்! பிரெஞ்சு மொழி நீக்கத்திற்கு எதிராக வெடிக்கும் மிக பெரிய போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026 -2027 கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருகிறது. இதனால் பிரெஞ்சு நீக்கிவிட்டு, புதுச்சேரி பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்குப் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைக் கடுமையாக எதிர்த்துள்ள காங்கிரஸ், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனியாகக் கல்வி வாரியம் கிடையாது. அங்குப் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் தமிழ்நாடு பாடத் திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. இதற்கிடையே 2024-2025 கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கு அரசுப் பள்ளிகளில் முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.

பிரெஞ்சு மொழி நீக்கம்
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதாவது அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், தனியார் பள்ளிகளில் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் எதாவது 2 மொழிகள் என இருந்தது. இந்தச் சூழலில் தான் மத்திய அரசின் சிபிஎஸ்இ இன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது. 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலம், இந்தி, தமிழ் என மும்மொழிகளை மாணவர்களுக்குக் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ள நிலையில், 7 நாட்களில் இது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் கண்டனம்
இந்த அறிவிப்பு புதுச்சேரியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் புதுச்சேரி காங்கிரஸ் கடும் கண்டனத்தையும் போராட்டத்தையும் அறிவித்துள்ளது. இது தொடர்பாகப் புதுச்சேரி மாஜி முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில், "புதுச்சேரி மாநிலத்தில் தாய் மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலத்தைத் தவிர இந்தி திணிப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இதற்கு முன்பே ஒரு முறை இந்தி திணிக்க முயற்சி நடந்தபோது தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மிகப் பெரிய போராட்டம் நடந்தது. அதன் பிறகே அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது மோடி அரசு மீண்டும் இந்தியைத் திணிப்பை நடைமுறைப்படுத்த முயல்கிறார்கள்.
6ம் வகுப்பு முதல் இந்தியைக் கட்டாயமாக்க முயல்கிறார்கள். என்ஆர் காங்கிரஸ் கட்சியும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. இதைக் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இந்தியை விரும்பியவர்கள் படிக்கலாம். அதற்குத் தடை இல்லை. ஆனால், அதைக் கட்டாயமாக்குவது ஒரு நாளும் ஏற்க மாட்டோம்.
போராட்டம் அறிவிப்பு
இப்போது தான் தேர்தல் முடிந்துள்ளது. முடிவுகள் வராத நிலையில், அவசர அவசரமாக ஏன் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள். CBSE நிர்வாகம் இந்த அறிவிப்பை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பிறகு, இதில் முடிவு எடுக்கப்பட வேண்டும். ஏனென்றால் புதுச்சேரி மக்கள் இந்தி திணிப்பை எதிர்ப்பவர்கள். நாங்கள் இந்தி கட்டாயம் திணிப்பதை ஏற்க மாட்டோம்.
புதிய பாடத்திட்டம் எனச் சொல்லி இந்தியா திணித்து, பிரெஞ்சு மொழியைத் தூக்குவதை நாங்கள் ஏற்க மாட்டோம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையே நாங்கள் எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளோம்" என்றார்.
திமுக
அதேபோல புதுச்சேரி திமுகவும் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரெஞ்சு அக்ரிமெண்டில் மக்கள் விரும்புகிற வரை பிரெஞ்சு மொழி தொடரும் என்று சொல்லி இருக்கிறார்கள் என்றும் மத்திய அரசு உடனடியாக இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இல்லையென்றால் திமுக சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications