புதுச்சேரியில் சிக்கிய 160 பேர்.. தனி விமானம் அனுப்பி மீட்டுச் சென்ற பிரான்ஸ் அரசு!
புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் தங்கியிருந்த 160 பிரான்ஸ் நாட்டினரை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து சென்றது.
Recommended Video
பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுவையில் பிரெஞ்சு, இந்திய இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். புதுவை பிரெஞ்சு ஆதிக்கம் செலுத்திய பகுதி என்பதால் பிரான்ஸ் நாட்டினர் அதிகளவில் சுற்றுலா வருவர்.
அதுமட்டுமின்றி பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் பலர் புதுவையில் தங்கி படிக்கின்றனர். மேலும் லிசே பிரான்சே, பிரெஞ்சு தூதரகம், கொலம்பானி, பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் பிரான்ஸ் நாட்டினர் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் விடுமுறையிலும், உறவினர்களை பார்க்கவும், சுற்றுலாவுக்காக கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி வந்தனர். இவர்கள் தங்களது நாட்டிற்கு திரும்புகிற நேரத்தில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் தங்களுடைய நாட்டிற்கு செல்ல முடியவில்லை.
இதனால் புதுச்சேரியில் முடங்கி இருந்த அவர்கள், தங்களது பிரச்சினை குறித்து தூதரகத்தில் தெரிவித்தனர். இதையடுத்து 160 பிரான்ஸ் நாட்டினரை, சொந்த நாட்டிற்கு அழைத்து வர பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து 160 பேரும் இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு வந்தனர்.
அவர்களது ஆவணங்கள் சரி செய்த பின்பு, அவர்கள் அனைவரும் பேருந்து மூலம் சென்னை அழைத்து செல்லப்பட்டனர். சென்னை விமான நிலையத்திலிருந்து பிரான்ஸ் நாட்டு அரசு கொண்டுவந்துள்ள சிறப்பு விமானம் மூலம் அவர்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்கு சென்றனர்.