பைன் மட்டுமே கலெக்க்ஷன் பண்ண பிடிக்கல.. மக்கள் பாவம் இல்லையா.. அதான் நாங்களே இலவசமாக மாஸ்க் தரோம்..
புதுச்சேரி: புதுச்சேரி அருகே கிராமப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை போக்குவரத்து போலீஸார் ஏற்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேரும், தமிழகத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 7 பேர் மட்டுமே கொரோனா வைரசிற்காக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ரூபாய் 100 அபராதம் வசூலித்து வருகின்றனர்.
குறிப்பாக நாள் ஒன்றுக்கு 100 க்கும் மேற்பட்டோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை புதுச்சேரி முழுவதும் சுமார் 10 லட்சும் ரூபாய்க்கு மேல் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பலர் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுகின்றனர்.

இந்நிலையில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸார் தங்களின் சொந்த செலவில் முகக்கவசத்தை வாங்கி வில்லியனூர் கிராமப்பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் சிறுவர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இன்று பத்துக்கண்ணு பகுதியில் வில்லியனூர் போக்குவரத்து ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் உதவி ஆய்வாளர் புனிதராஜா ஆகியோர் 250 க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கி, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து ஆய்வாளர் ஆறுமுகம் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிலர் ஒரே முகக்கவசத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும்போது கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இன்னும் சிலர் முகக்கவசம் வாங்கக் கூட முடியாமல் இருக்கின்றனர்.

ஆகவே அவர்களுக்கு முகக்கவசம் வழங்க முடிவு செய்து, சொந்த செலவில் 500 க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை வாங்கி இலவசமாக வழங்கி வருகிறோம். குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு இந்த முக்கக்கவசத்தை வழங்கியுள்ளோம். யாரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்களுடைய எண்ணம் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications