TVK Vijay: "நான் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லாதீங்க"..தவெக நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த பெண் போலீஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்தப் பொதுக் கூட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கியூ ஆர் கோடு உடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஏராளமான தவெக தொண்டர்கள் குவிந்ததால் போலீஸார் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், அனைவரையும் உள்ளே விடுமாறு தவெக நிர்வாகி கூறியதால் திடீரென பலர் உள்ளே நுழைந்தனர். இதனால், கடும் கோபமடைந்த காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் தவெக நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் பொதுக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை அடுத்து விஜய் எந்தவொரு பொதுக் கூட்டத்தையும் நடத்தவில்லை. விஜய் மக்கள் சந்திப்புக்காக சேலத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில், அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் மக்கள் பிரசாரம் மேற்கொள்ள தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் விரிவான சாலை வசதிகள் இல்லாததாலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அம்மாநிலத்தின் முதலமைச்சரை சந்தித்துப் பேசியும் அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த வகையில், புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக் கூட்டம் இன்று நடக்கிறது. காலை 10.30 மணிக்கு ஹெலிபேடு மைதானத்திற்கு வரும் விஜய் பிரசார வேனில் நின்றபடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். விஜயைப் பார்ப்பதற்காக ஏராளமான இளைஞர்கள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் நடக்கும் கூட்டம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன. ஆனால், காலை முதலை ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினார். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் போலீஸார் அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சிலரை புஸ்ஸி ஆனந்த் கியூஆர் கோடு இல்லாமலேயே உள்ளே அனுமதித்தார். இந்நிலையில், அங்கிருந்த அனைவரையும் உள்ளே விடுமாறு தவெக நிர்வாகி ஒருவர் கூறிய நிலையில், பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கடும் கோபமடைந்தார்.
தவெக நிர்வாகிகளை பெண் காவல் அதிகாரி ஈஷா சிங் எச்சரித்ததோடு, திடீரென உள்ளே நுழைந்த தொண்டர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினார். கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு. தான் என்ன வேலை செய்ய வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் கூறக் கூடாது என்று கூறி தவெக நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications