பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பார்த்துட்டோம்.. விஜய் பற்றி கேட்காதீர்கள்.. சட்டென டென்ஷனான ஆர்எஸ் பாரதி
புதுச்சேரி: 76 வருஷம் பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் சந்தித்த கட்சி திமுக, தயவு செய்து விஜய் பற்றி எல்லாம் கேட்காதீர்கள். விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக ஒருவர் அரசியலில் நிலைத்துவிட முடியாது. கூட்டத்தை கூட்டியும் இன்று அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
புதுச்சேரி, கதிர்காமம் தொகுதி திமுக சார்பில் கலைஞர் சிலை, நுாலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றன. இந்த விழாவில், திமுக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்று திறந்து வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக சார்பில் புதுச்சேரியில் ஏற்கனவே பாரூக் மரைக்காயர், எம்.டி.ராமச்சந்திரன், ஆர்.வீ.ஜானகிராமன் என 3 முதலமைச்சர்கள் இருந்துள்ளனர். நான்கு முறை ஆட்சி அமைத்துள்ள நிலையில், தற்போது 5 ஆவது முறையாக திமுக ஆட்சியமைக்க உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் பணியாற்றுகிறோம். தொகுதி பங்கீடு குறித்து உள்ளூர் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதுகுறித்து இறுதி முடிவை ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தான் எடுப்பார்கள். தமிழகத்தில் திமுகவுக்கு நாங்கள் தான் போட்டி என அதிமுக, தவெக போன்ற கட்சிகள் சொல்கிறார்கள்.
எங்களுக்கு யார் போட்டி என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும். தற்போதைய சூழலில் நாங்கள் வலுவாக உள்ளோம். கடந்த 2019 இல் இருந்தே எடப்பாடி பழனிசாமி எங்கள் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் என சொல்லிக் கொண்டு இருக்கிறார், ஆனால் தற்போது அவர் கட்சியில் இருந்தே பாதி பேர் வெளியேறிவிட்டனர். முதலில் எடப்பாடி அவர் நிலைமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
விஜய் செல்லும் இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவது குறித்த கேள்விக்கு, பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் சந்தித்த கட்சி திமுக. தயவு செய்து விஜய் பற்றி கேட்காதீர்கள். ஓபனாக சொல்கிறேன். 76 வருடங்களில் பல பேரை பார்த்துவிட்டோம். நாரயணசாமி என்று ஒருவர் இருந்தார். விவசாயக் கட்சியை நடத்தி மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்.
80களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்ஜிஆர், இந்திராகாந்தி, கலைஞர் ஆகிய 3 பேரும் அவருடைய ஆரவை கேட்கச் சென்றனர். ஆனால் அந்த கட்சியே இன்று இல்லை. அதனால், கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக ஒருவர் அரசியலில் நிலைத்துவிட முடியாது. கூட்டத்தை கூட்டியும் இன்று அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications