ரங்கசாமி ஜெயிச்சுருவாரா.. உள்ளடியிலிருந்து எப்படி தப்பப் போகிறார்.. பாஜக கணக்கு என்ன?
புதுச்சேரி : புதுச்சேரி தேர்தல் களத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கும் நிலையில் ரங்கசாமிக்கு அங்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் போட்டி போட்டிக் கொண்டு தீயாய் வேலை செய்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
ஆனால் புதுச்சேரியில் இதுவரை கூட்டணியே முடிவாகவில்லை. தொடர்ந்து இழுபறி நிலையே காணப்படுகிறது. பிரதான கட்சிகள் இறுதியான முடிவை அறிவிக்காததற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. பல கட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தாலும், இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
வேறு வழியில்லாத காங்கிரஸ்
பதவி காலம் முடிய போகும் சமயத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், திமுக.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் அல்லது தனித்து போட்டியிட வேண்டும் என்பதை தவிர வேறு வழியில்லாத நிலையில் உள்ளது. இதனால் பாஜக - என்ஆர் காங்கிரஸ் இடையேயான நிகழ்வுகளை அமைதியாக கவனித்து வருகிறது.
கூட்டணிக்கு போராடும் பாஜக
மறுபக்கம் புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் அல்லது ஆட்சியில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்காக பாஜக தீவிரமாக போராடி வருகிறது. இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ.,க்களை கூட பெற முடியாத நிலையில் இருக்கும் பாஜக, ஆட்சி அமைக்க வேண்டுமானால் மற்ற கட்சிகளின் கூட்டணி அவசியம். இதனால் 2 வது பெரிய கட்சியான என்ஆர் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விடாமல் போராடி வருகிறது.
அமைதியாக இருக்கும் ரங்கசாமி
காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த பிறகு அடுத்தடுத்து வருகை புரிந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் புதுச்சேரியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என கூறியதால் பாஜக.,வுடன் அதிருப்தியில் இருந்தார் ரங்கசாமி. தனித்துப் போட்டியிடலாம் என்ற முடிவுக்கும் அவர் வந்திருந்தார். இதனால் பாஜக பயந்து போய் விட்டது.
முடிவை சொல்ல தயங்கும் ரங்கசாமி
பாஜக கூட்டணியை ஏற்க வேண்டுமானால் தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என ரங்கசாமி கன்டிஷன் போட்டார். இதனை ஏற்க பாஜக முதலில்தயக்கம் காட்டியது. நேற்று 4 மணி நேரம் பாஜக நிர்வாகிகளுடன் பேசிய பிறகும் ரங்கசாமி முடிவை சொல்லவில்லை. இந்த நிலையில் தற்போது ரங்கசாமி வழிக்கே பாஜக வந்து விட்டதால் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து விட்டனர்.
கற்ற பாடம் தான் காரணம்
மத்தியில் ஆளும் பாஜக.,வையும், அதன் பிரதிநிதியுமான துணைநிலை கவர்னராக இருந்த கிரண்பேடியையும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து நேரடியாக எதிர்த்து வந்தார். இதனால் கிரண்பேடியை வைத்து பாஜக ஏதாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தது. கடையில் பெரும்பான்மையை இழந்து, ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் நாராயணசாமி. இதனால் பாஜக கூட்டணிக்கு இப்போது நோ சொல்லி விட்டால், நாளை ஆட்சிக்கு வந்தால் நாராயணசாமி நிலை தான் தனக்கும் ஏற்படலாம் என ரங்கசாமி யோசித்து பாஜகவுக்கு பணியாமல் இருந்தார்.
ஜெயிப்பாரா
ஆனால் தற்போது ரங்கசாமிக்கு பாஜக பச்சைக் கொடி காட்டி விட்டது. ஆனால் ரங்கசாமி எப்படி ஜெயிக்கப் போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. இனிமேல்தான் ரங்கசாமி மிக மிக கவனமாக இருக்க வேண்டும். வேட்பாளர்களை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்தாக வேண்டும். விலை போகாத வேட்பாளர்களை அவர் தேர்ந்தெடுத்தாக வேண்டும். தனக்கு கடைசி வரை விசுவாசமாக இருக்கக் கூடியவர்களை அவர் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.
நமச்சிவாயம் போல
அவரது உறவினரான நமச்சிவாயம்தான் கடந்த முறை முதல்வராக வேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் நாராயணசாமி முதல்வராகி விட்டார். இதனால் மனத ளவில் கடுப்பாகவே இருந்து வந்தார் நமச்சிவாயம் .கடைசி நேரத்தில் சமயம் பார்த்து நாராயணசாமியை கவிழ்த்து விட்டு விட்டார். இதுபோன்ற ஆட்கள் குறித்து ரங்கசாமி கவனத்துடன் இருந்தாக வேண்டும். பதவி என்று வரும்போது யார் வேண்டுமாாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எனவே நிச்சயம் தேர்தலுக்குப் பிந்தைய ரங்கசாமியின் நிகழ்வுகள், பாஜகவின் காய் நகர்த்தலைப் பொறுத்து அமையும் என்பதால் ரங்கசாமி கூடுதல் கவனமத்துடன் இருந்தாக வேண்டும்.. காரணம் அவர் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால்!