நீங்க தரும் பணம் 1 நாள் செலவுக்கு கூட பத்தல! புதுச்சேரி முதல்வர் காரை நிறுத்தி பெண்கள் முறையீடு!
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் காரை நிறுத்திய பெண்கள் சிலர், நீங்க தரும் பணம் 1 நாள் செலவுக்கு கூட போதவில்லை என்றும் ரேஷனில் பொருட்கள் வழங்க வேண்டும் எனவும் உரிமையாக கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இதனிடையே ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்குவது பற்றி தாம் யோசித்து வருவதாக முதல்வர் ரங்கசாமி கூறியிருக்கிறார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட தயாரானார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

நல்லா இருக்கீங்களா?
உடனே முதல்வர் ரங்கசாமி அவர்களை பார்த்து நல்லா இருக்கீங்களா? என்று கேட்டார். அவர்கள் ரேஷன் கடையில் எங்களுக்கு அரிசி போடுங்கள் என்று கேட்டனர். அதற்கு முதல்வர் ரங்கசாமி பணம் கொடுத்தேனே என்று கூறினார். பணம் எத்தனை நாளுக்கு, நீங்கள் கொடுத்த பணம் அன்றைய தினமே செலவு செய்து விடுகிறோம். எங்களுக்கு பொருள் போடுங்கள் என்றனர்.

அரிசி நல்லா இல்லை
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய அரசு இப்படி தான் செய்யனும் என்று சொல்கின்றனர். உங்கள் வங்கி கணக்கில் பணம் போடுறோம் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். உடனே பொதுமக்கள் ரேஷன் ஊழியர்கள் சும்மாவே உள்ளனர். ஆகவே பணத்திற்கு பதில் பொருள் போடுங்கள் என்று கூறினர். மேலும் மஞ்சள் அரிசி நல்லா இல்லை என்றும் தெரிவித்தனர்.

யோசித்து வருகிறேன்
இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி என்ன போடலாம் என்று யோசனை செய்து வருகிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களிலேயே மிகவும் எளிமையானவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ரங்கசாமி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications