ஜல்லிக்கட்டு போட்டியில் மின்சாரம் பாய்ந்து 14 பேருக்கு நேர்ந்த கதி - புதுக்கோட்டை அருகே பரபரப்பு!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது எதிர்பாராவிதமாக மின் கசிவு ஏற்பட்டு 14 பேர் காயமடைந்துள்ளனர். மின்சார கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி எனும் ஊரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அங்கு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக மின்கசிவு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்தவர்களில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடைபெற்றபோது வாடியில் இருந்து வெளியேறி வந்த ஒரு காளை கலெக்ஷன் பாயிண்ட் அருகே மின் கம்பத்தில் இருந்து இழுத்துக் கட்டப்பட்டிருந்த கம்பியில் மோதியதில் மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்தக் கம்பி ஒன்றோடு ஒன்று உரசி மின் கசிவு ஏற்பட்டது.

அப்போது பேரிகார்டில் கை வைத்தபடி நின்று ஜல்லிக்கட்டை ரசித்துக் கொண்டிருந்த 14 பேர் மின் கசிவின் காரணமாக காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக அங்கிருந்த ஆம்புலன்சில் முதலுதவி செய்து ஆலங்குடி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்க்க வந்தவர்கள் மின்சார கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications