லட்சக் கணக்கில் மானியம்.. முதல்வர் ஸ்டாலினால் முன்னேறிய குடும்பங்கள்!
புதுக்கோட்டை: ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகள் முடிந்திருக்கிறது. அதற்கு எத்தனை இனிப்பான செய்திகளைத் தந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பல ஆண்டுகளாகப் பள்ளத்தில் கிடந்த வகுப்பினரைச் சமதளத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். அதற்கான சாட்சிதான் இந்தப் புதுக்கோட்டை மக்கள்.

இந்தத் திராவிட மாடல் ஆட்சியில் புதிய நம்பிக்கை பெற்று நல்ல நிலைக்கு நகர்ந்திருக்கிறார்கள். கூலியாக யாருக்கோ உழைத்து வந்த இவர்கள் இன்று 'தாட்கோ' மூலம் முதலாளியாக முன்னேறி இருக்கிறார்கள்.
அம்பேத்கர் சொன்னதைப் போல 'நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. எங்களுக்கு யாரும் அடிமையும் இல்லை' என்பதை இந்த உலகிற்குப் புரியவைத்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை கீழ ராஜ வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் 'தாட்கோ' மூலம் கடன்பெற்று தொழில்முனைவோராக உருவெடுத்திருக்கிறார். "சின்னதாக ஒரு அழகுநிலையம் முன்பு வைத்திருந்தேன். அது சின்ன கிராமத்தில் இயங்கி வந்தது. அதன்பின்னர் இதே தொழிலைப் பெரிய அளவில் செய்யலாமே என ஆசை வந்தது. அதே மாதிரி நகரப் பகுதியில் இந்தக் கடையை நடத்தினால், அதிக வருமானம் கிடைக்கும் என்றும் யோசித்தேன்.
ஆகவே 'தாட்கோ' மூலம் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். புதுக்கோட்டை நகரத்திற்குக் கடையை மாற்றினேன். மொத்தம் 7.5 லட்சம் கடன் கேட்டிருந்தேன். அவர்கள் எனது விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்துவிட்டு இரண்டே கால் லட்சம் மானியத்துடன் கடன் கொடுத்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை நகரத்தில் கடையை ஆரம்பித்த பிறகு இப்போது திருமணத்திற்குத் தேவையான மேக் அப் ஆர்டர் எடுத்துச் செய்துவருகிறேன். முன்பைவிட அதிக ஆர்டர்கள் கிடைத்துவருகின்றன. கடையும் முதலிலிருந்ததைவிட மாடர்ன் ஆக, மிகப் பெரியதாக மாற்றி அமைத்திருக்கிறேன்" என்கிறார்.
'தாட்கோ' உதவி மேலாளர், "ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 'தாட்கோ' மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் ஒன்றுதான் தொழில்முனைவோர் திட்டம். இதன் மூலம் ஒருவர் தனக்கு விருப்பமான தொழிலைத் தேர்ந்தெடுத்து சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க முடியும். அதற்கான அனுபவம் இருந்தால் போதும்.
இத்திட்டம் மூலம் கடன் பெறுவதற்காக வயது வரம்பு 18 வயது முதல் 65 வயது வரைக்குள் இருக்க வேண்டும். அதைப்போன்று ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

இந்தத் திட்டத்தின் பயனாளிதான் கிருஷ்ணவேணி. அவருக்குத் தனது அழகுநிலையத்தைப் பெரிய அளவில் நடத்துவதற்கான கனவு இருந்தது. ஆனால், அதற்கான முதலீடு அவரிடம் இல்லை. எங்களை அணுகி அவர் கடனுதவி கோரினார். 'தாட்கோ' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஏழரை லட்சம் கடனுதவி அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் 30% நிதி மானியத்துடன் கடன் அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 'தாட்கோ' மூலம் இதுவரை 200 பேர் பயன்பெற்று உள்ளனர். அதில் மொத்தம் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மானியமாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதிலே இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான வயது வரம்பு 18 முதல் 45 வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் மூன்றரை லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ள, அவர்களுக்கு விருப்பமான தொழிலை அவர்கள் கடன் பெற்றுத் தொடங்கலாம்.
இரண்டு சக்கர வாகனம், மூன்று வாகனம் விற்பனைக்கான கடையைத் தொடங்கலாம். அல்லது போட்டோ ஸ்டுடியோ அமைக்கலாம். இப்படி விருப்பத்திற்கு ஏற்ப எந்தத் தொழிலையும் தொடங்கி புதிய தொழில்முனைவோராகலாம்.

இதைப்போன்று ஆதிதிராவிட பெண்கள் தங்களுக்குள்ளாக சுய உதவிக்குழுக்களை நடத்தவும் கடன் அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 12 பெண்கள் இணைந்து குழுவைத் தொடங்கலாம். அதற்கான சான்றிதழை மகளிர் திட்ட அலுவலகத்தில் பெற்று இருப்பது கட்டாயம்.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்கள் நிலம் வாங்குவதற்கும் கடன் உதவி அளிக்கப்படுகிறது. அவர்களது சாதி வகுப்பைச் சேராத பிற வகுப்பினரிடம் இருந்து மட்டுமே நிலத்தை வாங்கமுடியும்.

அதிகபட்சமாக நன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கரும் புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கரும் வாங்கலாம். இதில் அதிகபட்சமாக மானியம் திட்டத்தொகையிலிருந்து 50% வழங்கப்படுகிறது. மேலும் முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் நிலம் வாங்குபவர் பத்து ஆண்டுகள் வரை அந்நிலத்தைப் பிறருக்கு விற்கமுடியாது" என்கிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் 'தாட்கோ' மூலம் கடன்பெற்று மருந்து மாத்திரைகளை மொத்த வியாபாரம் செய்யும் தொழிலைத் தொடங்கி இருக்கிறார். அவருக்கு 5 லட்சம் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. அவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பெற்ற கடன் தொகையில் 50% தொகை மானியமாக அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இரண்டரை லட்சம் அவருக்கு மானியம் கிடைத்துள்ளது. பாதிக்குப் பாதி அவருக்கு இலாபம் கிடைத்துள்ளது.
அவர் என்ன சொல்கிறார்?
"நான் பி.இ படித்துள்ளேன். படித்து முடித்த பிறகு வழக்கம் போலச் சென்னைக்கு வேலைத் தேடிச் சென்றேன். வாங்கும் சம்பளம் சாப்பாடு தங்க, ஊருக்கு வரப் போவதற்கே சரியாக இருந்தது. அங்கே ஒரு மருந்து கம்பெனியில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டி இருந்தது. அந்த அனுபவத்தைக் கொண்டுதான் தனியாகக் கடையைத் தொடங்க திட்டமிட்டேன்.

நான் உடனே 'தாட்கோ'வை அணுகினேன். நான் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் உடனடியாக கடனுதவி கிடைத்தது. விண்ணப்பம் கொடுத்த 5 நாளிலேயே எனக்கு நேர்காணல் அழைப்பு வந்தது. அடுத்து முறையான ஆவணங்கள் கேட்டார்கள். அந்த ஆவணங்கள் சரியாக இருந்தால், உடனே வங்கிக்கடனுக்கு ஏற்பாடு செய்தார்கள். எனக்கு எந்தப் பின்புலமும் இல்லை. தாட்கோ உதவி இல்லை என்றால் இன்றைக்கு நான் இல்லை. என் தொழிலும் இல்லை" என்கிறார் இந்த இளைஞர்.
கணேச பிரபு, "நான் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரச்சாரத்திற்கு இருந்தபோது ஸ்டாலின் வந்திருந்தார். அவரிடம் மனு கொடுத்திருந்தேன். அவர் முதல்வராக வந்த பிறகு என்னை அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.

மனுவில் விவசாயம் செய்வதற்காக agriculture rotavator கேட்டிருந்தேன். அதன் விலை 1 லட்சத்து 21 ஆயிரம். அதற்கு 42 ஆயிரம் மானியம் கிடைத்தது. அந்த மானியத் தொகை என்னைப் பொறுத்தளவில் மிகப்பெரிய பணம். இப்போது நான் வாங்கிய rotavator வைத்துத்தான் 5 ஏக்கர் வரை விவசாயம் செய்து வருகிறேன். எனது தேவை போக இந்த எந்திரத்தை வாடகைக்கும் விடுகிறேன்.
நான் கேட்டவுடன் உடனே கடன் கிடைத்தது. 10 நாளில் அனைத்து நடைமுறை களையும் முடிந்து எந்திரத்தை வீட்டுக்கு வாங்கி வந்துவிட்டேன்.

அறந்தாங்கி வேளாண்மை உபக் கோட்டத்தில் உதவிப்பொறியாளர் உள்ளார் ரமேஷ். அவர், "இந்தப் புதுக்கோட்டை மாவட்டம் மானம் பார்த்த பூமி. மழைக்காலங்களில்தான் விவசாயம் நடக்கும்.
ஆகவே, வேளாண்மை மக்கள் தேவைகள் என்னவோ அதை உடனடியாக செய்து தருகிறோம். கணேச பிரபு முதல்வரிடம் மனுபோட்டு கடனுதவி கேட்டு இருந்தார். மண் கலவை எந்திரம் வாங்க உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

அந்தக் கோரிக்கையை முதல்வரின் உத்தரவுக்கிணங்க உடனடியாக செய்து தந்துள்ளோம். இன்னும் யாருக்கு என்ன உதவிகள் தேவையோ அதைச் செய்யத் தயாராக உள்ளோம்" என்கிறார்.
இவரைப் போன்று மற்றொரு விவசாயி ஜெயராமன். இத்தனை ஆண்டுகளாக மானம் பார்த்த பூமியை வைத்து விவசாயம் செய்து வந்தார். அவர் முதல்வரிடம் தனது விவசாய தேவைக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க உதவிக் கேட்டிருந்தார். அவருக்கு இப்போது வேளாண்துறை சார்பில் இலவசமாக ஆழ்துளைக் கிணற்றை அமைத்துத் தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

"இந்த ஆழ்துளைக் கிணறு அமைப்பது சாதாரண விசயம் இல்லைங்க. பெருந்தொகை செலவழித்தால்தான் அதைச் செய்ய முடியும். எங்களால் பெரிய தொகையை எல்லாம் செலவழித்துப் போர் போட முடியாது. முதல்வர் ஐயா எட்டு லட்சம் மானியம் கொடுத்து இந்த ஆழ்துளைக் கிணற்றை அமைத்துக் கொடுத்துள்ளார். அவர் உதவி இல்லை என்றால் இது நடந்தே இருக்காது. அது சத்தியம்" என்கிறார் விவசாயி ஜெயராமன்.

இப்படி இவர்கள் மட்டும் முதல்வரை வாழ்த்தவில்லை. ஏறக்குறைய 'தாட்கோ'வில் மட்டும் 200 பேர். அதைத் தாண்டி வேளாண்துறை மூலம் பலன் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்தமாகச் சொல்வது 'முதல்வர் ஸ்டாலின் உதவி இல்லை என்றால் நாங்கள் இல்லை' என்பதைத்தான். முதல்வர் ஸ்டாலின் குரலில் சொன்னால் இது உதவி இல்லை, உங்களின் உரிமை!













Click it and Unblock the Notifications