சாலையோரம் நின்ற கார்.. உள்ளே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் சடலம்.. சிக்கிய அதிர்ச்சி கடிதம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளங்குடிபட்டியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு 5 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் அருகே இளங்குடிபட்டியில் சாலையோரம் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றிருந்தது. அதன் அருகிலும் யாரும் இல்லாத நிலையில், இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் விரைந்து வந்து பார்த்ததில், சாலையோரம் நின்ற காருக்குள் ஐந்து பேர் சடலமாக இருப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக, மருத்துவர்களையும், தடயவியல் நிபுணர்களையும் அங்கு வரவழைத்தனர். 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
காருக்குள் உயிரிழந்த நிலையில் இருந்த 5 பேரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி, மகன், மகள் மற்றும் மாமியார் என 5 பேர் என்றும் தெரியவந்துள்ளது. அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்த காரில் ஒரு கடிதமும் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications