ஜெயலலிதா எனக்கு தெய்வம்.. கடவுள்! நான் அப்படி செய்வேனா! மவுனம் கலைத்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்!
புதுக்கோட்டை: ஜெயலலிதாவை பொறுத்தவரை தனக்கு தெய்வம் என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது எனவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர்,ஆறுமுகசாமி அறிக்கையில் முற்றிலும் தவறான தகவல் உள்ளதாக வேதனைத் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறித்த கேள்வி.. படித்து விட்டு சொல்வதாக நழுவிய விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர்
ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் தாம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், முதல்முறையாக அது குறித்து மவுனம் கலைத்து பரபரப்பு விளக்கம் கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். ஜெயலலிதா தன்னை ஆளாக்கிய தெய்வம், கடவுள் என்று குறிப்பிட்ட அவர், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சியிருப்பது போல் உள்ளதாக கூறினார்.
நானும் ஒருவன்
ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்து மீண்டு வர வேண்டும், குணம் அடைய வேண்டும் என வேண்டிய லட்சோப லட்சம் அதிமுக தொண்டர்களின் நானும் ஒருவன் என்று கூறிய விஜயபாஸ்கர், ஒரு அமைச்சராக மனசாட்சிக்கு விரோதமின்றி நடந்துகொண்டதாக விளக்கம் அளித்தார். அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்களை சட்டப்படி நெஞ்சுரத்தோடு எதிர்கொள்வேன் எனத் தெரிவித்தார். பொதுவாழ்வில் இது போன்ற குற்றச்சாட்டுகள் இயல்பானது எனத் தெரிவித்தார்.
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸை பொறுத்தவரை எவ்வளவு நேர்மையானவர் என்பது உலகிற்கே தெரியும் ஆனால் அவரையும் ஆறுமுகசாமி ஆணையம் கடுமையாக விமர்சித்துள்ளதாக சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தனக்கு மடியில் கணமில்லாததால் வழியில் பயமில்லை என பஞ்ச் டயலாக் அடித்துவிட்டு புறப்பட்டார். இருப்பினும் ஆறுமுகசாமி ஆணையம் பற்றிய கேள்விகளை செய்தியாளர்கள் தொடர்ந்து முன் வைத்ததால் புன்னகை செய்தவாறே கிளம்பிவிட்டார்.
அரசியல் உள்நோக்கம்
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது எனக் குற்றஞ்சாட்டிய அவர் அதற்கு மேல் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. விஜயபாஸ்கரை மையப்படுத்தி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்பது கவனிக்கத்தக்கது.