புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர் இன்று பயணம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தடபுடல் வரவேற்பு..!
புதுக்கோட்டை: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டை செல்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செல்கிறார். அங்கு ஐடிசி நிறுவன அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர் அதைத் தொடர்ந்து கவிநாடு கண்மாயை பார்வையிடுகிறார்.

கவிநாடு கண்மாயை பொறுத்தவரை ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முக்கிய அங்கமாக கவிநாடு கண்மாய் திகழ்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான அதனை பார்வையிடுவதற்கு முன்னர் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைக்கிறார்.
சீறி வரும் ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்க முயல்வது போன்று அமைக்கப்பட்டுள்ள அந்த சிலையை அமைச்சர் விஜயபாஸ்கர் நிறுவியுள்ளார். தனது சொந்த ஊரான விராலிமலையில் நிறுவி அதனை திறந்து வைக்க முதலமைச்சரை அழைத்து வந்து சொந்த ஊரில் மாஸ் காட்டியிருக்கிறார்.
விராலிமலை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு புதுக்கோட்டை வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள 'கேத் லேப்' வசதியை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் அவர் அங்கிருந்தவாறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தனது நிகழ்ச்சிகளை மாலை 5 மணிக்குள் முடித்துக்கொண்டு திருச்சி திரும்பும் முதலமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.
இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தனது மாஸை காட்டும் வகையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications