புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி பலி வழக்கில் ‘ட்விஸ்ட்’.. தீர்த்துக் கட்டிய கனிம வள கொள்ளையர்கள்
புதுக்கோட்டை: கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் இறந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், நடந்தது விபத்து அல்ல என்றும் கல் குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கோனாபட்டு அஞ்சல் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கரீம் என்பவரின் மகன் ஜகபர் அலி. முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலரும் கூட. இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார்.

எனினும், தொடர்ந்து இதுபோன்று மனுக்களை கொடுத்து வந்துள்ளார். பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருவது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் கனிம வள கொள்ளை தொடர்பாக மனு அளித்துள்ளார். சில குவாரிகளின் பெயர்களுடன் பல ஆதாரங்களையும் இணைத்து பல நூறு கோடிக்கான கனிம வள கொள்ளை நடந்துள்ளதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கனிம வள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி, கடைசியாக 10 ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் பல ஆதாரங்கள், ஆவணங்களுடன் மனு கொடுத்த அடுத்த 7 நாட்களில் டிப்பர் லாரி மோதி உயிரிழந்தது சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். ஜகபர் அலி மரண விவகாரத்தை விசாரிக்க, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளையை எதிர்த்த நேர்மையான அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, ஜகபர் அலியும் திட்டமிட்டு கல்குவாரி அதிபர்களால் கொல்லப்பட்டிருக்கலாம், இதில் அரசு அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சந்தேகம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் இறந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜெகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஜேசிபி மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications