கமகம பிரியாணி.. இரவு பகலாக வேலை பார்க்கும் மின்வாரிய ஊழியர்களுக்கு.. புதுக்கோட்டை அருகே அசத்தல்!
மின்வாரிய ஊழியர்களுக்கு கிராம மக்கள் விருந்து வைத்தார்கள்.
புதுக்கோட்டை: ராத்திரியும், பகலுமா தங்களுக்காக உழைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு பிரியாணியை மணக்க மணக்க சமைத்து போட்டுள்ளார்கள் கிராம மக்கள்!
கஜாவால் டெல்டா மாவட்டங்களே நொந்து, சிதைந்து போனது. இப்போதுதான் ஓரிரு நாளாக ஒவ்வொரு மாவட்டமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கிராமத்தை பழைய மாதிரிமீட்டு கொண்டு வர எவ்வளவோ பேர் பாடுபட்டார்கள். தனிநபர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை!
குறிப்பாக மின்வாரிய ஊழியர்களின் பங்கு அபரிமிதமானது. இருட்டில் மூழ்கி கிடந்த பகுதிகளில் கரண்ட்டை வரவழைக்க இவர்கள் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. டியூட்டி என்பதையும் தாண்டி இவர்களின் பங்கு அளப்பரியது.
சாப்பிடகூட நேரமில்லை
சாப்பிடக் கூடிய நேரம் இல்லாமல் கரண்ட் கம்பத்தின் மீது சாப்பிட்ட ஊழியர்களை நாம் இணையத்தில் போட்டோக்கள் மூலமாக பார்த்தோம். மழையில் நனைந்தும், நடுரோட்டில் உட்கார்ந்தும் சாப்பிட்ட மின் ஊழியர்களையும் பார்த்து புல்லரித்து போனோம்.
முக்கண்ணாமலைப்பட்டி
தற்போது நிறைய கிராமங்களில் வெளிச்சம் வந்துள்ளது. இத்தகைய மின்ஊழியர்களுக்கு அன்னவாசல் அருகே உள்ள கிராம மக்கள் நன்றியை உதிர்த்துள்ளனர். அந்த நன்றியை வெறும் வார்த்தைகளாக சொல்லாமல், மனசு நிறைய சந்தோஷத்துடன் மணக்க மணக்க பிரியாணி சமைத்து போட்டார்கள். இந்த கிராமத்தின் பெயர் முக்கண்ணாமலைப்பட்டி என்பதாகும். இங்குதான் பிரியாணி விருந்து வைத்து அவர்களை வயிறு நிறைய சாப்பிடவிட்டு அனுப்பியுள்ளார்கள்.
சுழன்று சுழன்று வேலை
வேறு வேறு இடங்களிலிருந்து வந்துதான் இந்த பகுதியில் சீர்செய்யும் வேலையில் இறங்கி வந்திருக்கிறார்கள். புயல் வந்து போய் கரண்ட் வரும் வரை 5 நாளும் கிராம மக்களோடு ரொம்ப நெருக்கமாகி விட்டார்கள். காலையில வேலையை ஆரம்பித்தால் ராத்திரி வரை நிக்காமல் சுழண்டு சுழண்டு வேலை பார்த்த இந்த மின் ஊழியர்களிடம் கிராம மக்கள் தினமும் பேசியும், உற்சாகப்படுத்தியும், வந்திருக்கிறார்கள். ஆனால் ஊழியர்கள் வெளியில் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்.
அறுக்க முடியாத உறவு
திடீரென்று கிராம மக்கள் இந்த ஊழியர்களை சந்தித்து, "வாங்க... எங்களோட வந்து சாப்பிட்டு போங்கள் என்று சொல்லி கூப்பிட்டார்களாம். இதனால் நெகிழ்ந்து போய் ஊழியர்கள் சென்றால், பிரியாணி வாசனை மூக்கை துளைத்தெடுத்ததாம். இந்த கிராமத்தில் மின்ஊழியர்களுக்கு பழக்கம் 5 நாள்தான்.. ஆனால் இப்போது அறுக்கவே முடியாத பந்தத்தை கிராம மக்கள் தங்கள் நன்றியால் ஊழியர்களுக்கு காட்டி விட்டார்கள்.