திருமண சீர்வரிசை! ஆட்டம், பாட்டத்துடன் 9 மாட்டு வண்டிகளில் வந்த தமிழ் புத்தகங்கள்- கலக்கிய கவிஞர்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் புதுமண தம்பதிக்குத் தமிழ்ப் புத்தகங்களைச் சீர்வரிசையாகக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாகத் திருமணம் செய்து வைக்கும் போது, பெற்றோரும் ஊர் மக்களும் சில சமயம் சீர்வரிசை வழங்குவது என்பது தமிழகத்தில் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கமாக உள்ளது.
இதனிடையே புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தம்பதிக்கு தமிழ் புத்தகங்களைச் சீர்வரிசையாகக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

தமிழினி வாட்ஸ்அப் தளம்
செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்பை அடுத்து வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஆசிரியர்கள், மருத்துவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரை ஒருங்கிணைத்து "தமிழினி வாட்ஸ்அப் தளம்" ஒன்று பெயரில் வாட்ஸ்அப் தளத்தில் க்ரூப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தின் கவுரத் தலைவராக முன்னாள் சாகித்திய அகடமி குழு உறுப்பினரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞருமான தங்கம் மூர்த்தி உள்ளார்.

ஊர்வலம்
இவரது மகள் காவியாமூர்த்தியின் திருமண விழா நேற்று புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடந்த இந்தத் திருமண விழாவில் மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட ஒன்பது மாட்டு வண்டிகளில் தமிழ்ப் புத்தகங்களை வைத்து தமிழினி புலனக்குழு சார்பில் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. கவிஞர் தங்கம் மூர்த்தியின் வீடு அமைந்துள்ள பாரத் நகரில் இருந்து இந்த மாட்டு வண்டிகளில் திருமண மண்டபம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

9 மாட்டு வண்டிகளில் தமிழ்ப் புத்தகங்கள்
அலங்கரிக்கப்பட்ட 9 மாட்டு வண்டிகளில் திருவள்ளுவர், அவ்வையார், இளங்கோவடிகள், கம்பர்,பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை, கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி ஆகிய கவிஞர்கள் எழுதிய கவி நூல்களை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மா, பலா, வாழை என முக்கனிகள் மற்றும் மலர்களைத் தட்டில் ஏந்திய படியும், தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான உருமி இசை முழங்க மேளதாளம் இசைக்க ஆட்டம் பாட்டத்துடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

கலக்கல் சீர்வரிசை
தமிழகத்தில் திருமண நிகழ்வுகளில் சீர்வரிசை வழங்குவது என்பதை வழக்கமான ஒரு நிகழ்வு தான், என்றாலும் கூட புதுக்கோட்டை நகரில் உள்ள பிரதான சாலையில் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வந்து மணமக்களுக்குச் சீர்வரிசை பொருட்களை வித்தியாசமான முறையில் கொடுத்த தமிழினி புலன குழுவினரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications