அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றணும்! உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
புதுக்கோட்டை: அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரூ.25.67 கோடி மதிப்பீட்டில் 3,391 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அனைத்துத் துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

அதில் காலை சிற்றுண்டித் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், முதல்வரின் முகவரி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சாலை, குடிநீர் திட்டப் பணிகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் திட்டங்கள், நமக்கு நாமே திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், இ-சேவை மையம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலமாக தகுதியான நபர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்..
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும், பொதுமக்கள் முதலமைச்சர் தலைமையிலான அரசு மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் அனைத்துத் துறை அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications