சொத்து குவித்த பாண்டித்துரை..வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி விசாரணை..வசமாக சிக்கியது எப்படி?
புதுக்கோட்டை: அரசு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் வருமான வரித்துறையினர்
இன்று மூன்றாவது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக ரூ.2000 கோடி சொத்துக்களை குவித்தது எப்படி என்று பாண்டித்துரையிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை, வயது 47. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்த இவர், முதற்கட்டமாக நெருக்கமானவர்களுக்கு நெடுஞ்சாலையோரம் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை கொடுத்து வந்துள்ளார்.
படிப்படியாக வளர்ந்து வந்த இவருக்கு, கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியேறினார்.

அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை
நெடுஞ்சாலைத்துறையில் அரசு ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொண்ட பாண்டித்துரை, தொடர்ந்து கோடிக்கணக்கில் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணி செய்ய தொடங்கினார். கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பாண்டித்துரையின் வாழ்க்கையில் ஏறுமுகம்தான். அடுத்தடுத்து அவருக்கு பல கோடி ரூபாய் அளவில் அரசு ஒப்பந்தங்கள் கிடைத்தது. இதனால் இவரது சொத்து மதிப்பு ஆயிரக்கணக்கான கோடி அளவில் உயர்ந்தது.

ஒப்பந்த முறைகேடு
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடாக ரூ. 5ஆயிரம் கோடியில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றம் சென்று, பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்றது. முறைகேடாக விடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் பாண்டித்துரை ரூ.500 கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் எடுத்து பணி செய்ததாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை சோதனை
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் பாண்டித்துரையின் வீட்டில் கடந்த 12ஆம் தேதி முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூரில் பாண்டித்துரை குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள ஹரிவே லயன்ஸ்'' என்ற பெயரில் இயங்கும் அவரது அலுவலகம், அதே பகுதியில் உள்ள அவரது வீடு, அவரது மேலாளர் பீட்டரின் வீடு உள்ளிட்ட இடங்களில் 30க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இரண்டாவது நாளாக சோதனை
இதில் முதல் நாளில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை வீட்டில் உள்ள அறையில் பூட்டி வைத்தனர். சோதனையை முடித்துக்கொண்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கினர். இந்நிலையில் 2வது நாளாக நேற்று காலை மீண்டும் பாண்டித்துரை வீட்டிற்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து முறைகேடு குறித்து பதிவு செய்தனர்.

சொத்துக்குவிப்பு
பாண்டித்துரை கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கோடிக்கான சொத்துக்களை பாண்டித்துரை வாங்கி குவித்துள்ளார். இந்த ரூ. 2,000 கோடி சொத்து பத்திரங்கள் புதுக்கோட்டை வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கிடைத்துள்ளதாகவும், அவற்றை வைத்து இவ்வளவு சொத்து வாங்கியது எப்படி, இதற்கு பணம் கொடுத்தது யார் என்று ஒரு தனி குழு அமைத்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டித்துரையிடம் விசாரணை
இதனிடையே மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துரை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் பாண்டித்துரையை நேரில் வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாண்டித்துரை வீட்டில் 2 நாட்கள் நடந்த சோதனையில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளது. இவ்வளவு சொத்துக்கள் வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வந்தது என பாண்டித்துரையிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications