புதுக்கோட்டையில் வீட்டின் பெயரில் கடன்.. கொட்டை எழுத்தில் அசிங்கப்படுத்திய பைனான்ஸ் ஊழியர்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வீட்டிற்கு சரியாக தவணை தொகையை கட்டாத காரணத்தால் நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டின் மீது, கருப்பு மையில், இந்த வீடு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானத்தில் உள்ளது. சரியாக தவணை செலுத்தாத காரணத்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று கொட்டை எழுத்தில் எழுதியுள்ளனர். இது தொடர்பாக வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பால கிருஷ்ணன், சக்திவேல் ஆகியோர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்கள். இதேபோல் ஆடு வளர்ப்பு தொழிலும் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் பால கிருஷ்ணன் தனது மகளின் திருமணத்திற்காக ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் வங்கி உள்ளார். 19 மாதம் தவணையாக அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இவர் 15 மாத தவணை தொகையை சரியாக செலுத்தி உள்ளார். ஆனால் கடந்து 3 மாதங்களாக தவணை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதே போல சக்திவேல் மற்றொரு நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். அவரும் சரியாக தவணை செலுத்தி வந்துள்ளார். இவரும் கடந்த 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடன் தொகையை வசூலிக்க வந்த இரண்டு நிதி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பாலகிருஷ்ணன், சக்தி வேலுக்கு சொந்தமான வீட்டில் பெரிய அளவில் இந்த வீடு அடமானத்தில் உள்ளது. 3 மாத நிலுவை ரூ.45,204 செலுத்தப்படவில்லை என்று கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு சென்றுள்ளனர். இதனை கண்ட அந்த கிராம மக்கள் அந்த வீட்டிற்கு வந்து துக்கம் விசாரிக்க தொடங்கிவிட்டார்கள்.
அவமானத்தால் மனமுடைந்த சக்திவேல் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி புத்தி சொல்லி வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். பாலகிருஷ்ணனின் மனைவி அவமானம் தாங்க முடியாமல் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது பாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு வராமல் வெளியிலேயே இருக்கிறாராம்.
இது குறித்து சக்திவேல் கூறுகையில், தவணை தொகையை சரியான காலத்தில் செலுத்தி வந்தோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக எங்களது தாயாரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததால், வைத்திருந்த பணம் மருத்துவத்திற்காக செலவிடப்பட்டு விட்டது. 3 மாத தவணையை எப்படியும் செலுத்தி விடுவோம் என்று நாங்கள் பணம் வசூலிக்கும் நிதி நிறுவன ஊழியரிடம் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் இவ்வாறு எங்களை அவமானப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்கள் " என்றார்.
பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை கட்டவில்லை என்றால் அல்லது தவணை தொகையை முறையாக செலுத்தவில்லை என்றால் நிதி நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த வீடு ஏலத்தில் விட நீதிமன்றத்தில் முறையிட்டு முறைப்படி நோட்டீஸ் வழங்கி அதன்பிறகு வீட்டின் மீது விளம்பரம் வைக்க வேண்டும். அதேநேரம் வீட்டு கடனை வசூலிக்க வீடு மீது கடன் உள்ளது. தவணை செலுத்தவில்லை என்று கொட்டை எழுத்தில் எழுதி அவர்களை அவமானப்படுத்த அனுமதி இல்லை.. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிதி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications