மீண்டும் விராலிமலையில் விஜயபாஸ்கர்... அமைச்சருக்காக தேர்தல் பணிகளை தொடங்கிய அதிமுகவினர்..!
புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விராலிமலை தொகுதியில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடந்த வாரம் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், விராலிமலை தொகுதியை பொறுத்தவரை எப்போதும் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் என்றும் தொடர்ந்து இந்த தொகுதியில் நமது கொடி தான் பறக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி மாறப்போவதாக கூறப்பட்ட நிலையில் அதனை மறுக்கும் வகையில் அவர் கூறியிருக்கிறார்.

புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள விராலிமலை தொகுதி தான் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியாகும். இந்த தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் அருகே தான் அமைச்சரின் சொந்தக் கிராமம் அமைந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி மக்களின் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளக் கூடியவர்.
முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களாயினும் தனது தொகுதியை சேர்ந்தவர் எனத் தெரிந்தால் போதும் அவர்கள் வைக்கும் அழைப்பிதழை ஏற்று அவர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். இல்லையென்றால் அமைச்சர் கொடுத்துவிட்டதாக அவர் தரப்பில் இருந்து மொய் கவர் சென்றுவிடும். இதனால் கட்சி பேதங்களை கடந்து விராலிமலை தொகுதிக்குள் தனக்கென ஓரளவு செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி மாறப்போவதாகவும் புதுக்கோட்டை அல்லது மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இது பற்றி உள்ளூர் அதிமுகவினர் சிலர் அவரிடம் நேரடியாக கேட்டு விட்டனர். ஆனால் அப்படியொரு எண்ணம் தமக்கில்லை என்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய போது அதில் தாம் தொகுதி மாறப்போவதில்லை எனவும் விளக்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications