வட மாநிலத்தவர்கள் விவகாரம்.. யார் யாரை தாக்குகிறார்கள்? புதுக்கோட்டையில் கடுகடுத்த சீமான்!
வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல் வதந்தி தொடர்பாக சீமான் கருத்து கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: தமிழ்நாடு மக்கள் வட மாநில தொழிலாளர்களை தாக்கவில்லை என்றும், வட மாநிலத்தவர்கள் தான் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் சில பொய்யான வீடியோக்கள் வேகமாக பரவின. இந்த வீடியோக்கள் பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. வட இந்தியர்களை தமிழர்கள் குறி வைத்து தாக்குவதாகவும், கொலை செய்வதாகவும் பாஜக நிர்வாகி பொய்யாக பதிவிட்ட சமூக வலைதள பதிவு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

சீமான் மீது விமர்சனம்
இதனைத் தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் மீது வெறுப்பை விதைக்கும் அமைப்புகள், தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

சீமான் பேட்டி
இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் எழுப்பிய கேள்விக்கு, பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய குழு வந்துள்ளது. இதுபோல் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்தார்களா? வட மாநிலத்தவர்கள் எங்களை தாக்குகிறார்களா? அல்லது நாங்கள் வட மாநிலத்தவர்களை தாக்குகிறோமா? என்று கேள்வி எழுப்பினார்.

குற்றச்செயல்கள்
அதேபோல் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களில் ஒருவரை தான் காவல்துறை கைது செய்துள்ளது. உணவகத்தில் வேலை செய்து உணவக முதலாளியையே கொலை செய்து பணம் எடுத்துவிட்டு ஓடியது யார்? புரளியை கிளப்பிவிடுகிறார்கள். இதுவரை தமிழ்நாட்டு மக்கள் எங்காவது வட மாநிலத் தொழிலாளர்களை தாக்கியுள்ளார்களா?

திமுக, காங்கிரஸ்
தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தியது வட மாநிலத்தவர்கள் தான். கரூர் மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் தாக்கியவர்கள் யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இந்த விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேவையில்லாமல் பேசி பரப்புவிடுகிறார்கள் என்றும் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications