குளித்து கொண்டிருந்த பெண்கள்.. டக்குனு கண்மாய் வந்த "சமூகத்தினர்".. இன்னுமா அடங்கல? அலறிய அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமை இன்னமும் தொடர்கிறது
புதுக்கோட்டை: இன்னொரு பகீர் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள். என்ன நடந்தது புதுக்கோட்டையில்?
கல்வி கிடைத்தால், எல்லாவிதமான பாகுபாடுகளும் ஒழிக்கப்பட்டு விடும் என்று மலைபோல் நாம் நம்பி கொண்டிருந்தால், அப்படிப்பட்ட கல்வி நிலையங்களிலேயே சாதி தலைவிரித்தாடுவது வேதனையை தருகிறது.
கடந்த மாதம் ஈரோட்டில் அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை.. ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைக்கும் நிகழ்வு முதல் இன்னும் ஏராளமான சம்பவங்கள் நம் தமிழகத்தில் நடப்பது கவலைக்குரியதாக உள்ளது.

தனிக்குவளை
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சம்பவங்கள், தமிழக மக்களை திரும்பி பார்க்க வைத்தது.. இறையூர் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில், மலம் கலந்துள்ளனர் சமூக விரோதிகள்.. இதையடுத்து, புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகிய 2 பேருமே ஸ்பாட்டுக்கு சென்று நேரடியாகவே விசாரணையை நடத்தினர்.. அப்போதுதான், வெள்ளனூர் தேநீர் கடையில், தலித் மக்களுக்கு தனி டம்ளரில் தேநீர் கொடுக்கப்படுவதாகவும், அங்குள்ள அய்யனார் கோவிலுக்குள் உள்ளே விடுவதில்லை என்றும் மக்கள் லிஸ்ட் போட்டு குறைகளை சொன்னார்கள்.

கண்மாய் குளம்
இதையடுத்து, அதிகாரிகளுடன் அந்த டீக்கடைக்கு சென்று விசாரித்த கலெக்டர், டீக்கடைக்கு உள்ளே கண்ணாடி டம்ளர், எவர்சில்வர் டம்ளர்கள் என பிரித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்துபோனார். இதையடுத்து, டீக்கடை ஓனர் மூக்கையா மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார் கலெக்டர். பின்னர், அய்யனார் கோவிலுக்குச் சென்ற கலெக்டர் கவிதா ராமு, கோயிலை நிர்வகிப்பவர்களிடம் யாரையும் சாமி கும்பிட மறுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். அந்த கோயிலின் சாவியை கேட்டு பெற்ற கலெக்டர், பட்டியிலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தார்.

குளிக்க வந்த பெண்கள்
3 தலைமுறைகளுக்கு பிறகு, அம்மக்கள் கோயிலுக்குள் நுழைந்துள்ளனர்.. இந்த சம்பவங்களுக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டை தெரிவித்தனர்.. ஆனாலும், இதே இழிநிலைமை, இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு ரூபத்தில் தொடருவது தற்போது அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது. அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தங்குடி என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், பெருங்காடு கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தனர்... அப்போது மாற்றுச் சமூகத்தை சேர்ந்த சிலர் அங்கு வந்துள்ளனர்..

முள்காடு
குளித்துக் கொண்டிருந்த பட்டியல் சமூகத்து பெண்களை பார்த்து, இந்த கண்மாயில் உங்களை யார் அனுமதித்தது? இங்கே குளிக்கக்கூடாது என்று மிரட்டியதோடு, ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.. மேலும், அந்த பெண்ணின் துணிகளை எல்லாம், முள்காட்டுக்குள் தூக்கி வீசிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது... இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள், நாகுடி போலீசாரிடம் முறையிட்டதுடன், புகாரும் தந்தனர்.. அந்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐயப்பன், முத்துராமன் ஆகிய 2 பேர் மீது வழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்..

அடையாளம்
ஆனால், அவர்கள் 2 பேரையுமே இப்போது காணோம்.. போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.. எவ்வளவுதான் சாதீய விவகாரத்துக்கு எதிராக, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், "சில அடையாளங்கள்" மனித இனத்துக்கு எதிராக அமையும் வண்ணம் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருப்பதால், அவைகளை களைய இன்னும் பற்பல முயற்சிகள் இங்கு உடனடி தேவையாக இருக்கின்றன..!!!












Click it and Unblock the Notifications