ஆடு மேய்க்க போன முருகேசன் மனைவி.. நடுக்காட்டில் செருப்பும் தொப்பியும்.. கொலையாளி யார்?
ஆடு மேய்க்க சென்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
புதுக்கோட்டை: ஆடு மேய்க்க போன முருகேசனின் மனைவியை யார் கொன்று போட்டார்கள் என்றே தெரியவில்லை.. நடுக்காட்டில் ஒரு ஜோடி செருப்பும், தொப்பியும் விழுந்து கிடக்கிறது.. அதனால் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அடுத்துள்ளது தேனிப்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் முருகேசன். இவரது மனைவி பானுமதி.. 45 வயதாகிறது.. ஆடு மேய்ப்பதுதான் இவர்களது தொழில்.
தென்னதிரையன்பட்டி ஆர்எஸ்பதி காட்டுப்பகுதியில்தான் வழக்கமாக ஆடு மேய்த்து வருவர்.. பானுமதிதான் ஆடுகளை அந்த பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.. அப்படித்தான் நேற்றும் ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார்.. ரொம்ப நேரமாகியும் பானுமதி வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை.. ஆனால் ஆடுகள் மட்டும் சரியாக வீடு வந்து சேர்ந்தன.
இதனால் பதறி போன முருகேசன் குடும்பத்தினரை அழைத்து கொண்டு காட்டுப் பகுதிக்கு ஓடினார்.. அங்குதான் பானுமதி பிணமாக கிடந்தார்.. அவரை அரிவாளால் வெட்டி உள்ளனர்.. ரத்த வெள்ளத்தில் பானுமதி விழுந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் கதறினர்.
தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து விசாரணையை கையில் எடுத்தனர். அப்போது, பானுமதி கொலை செய்யப்பட்ட இடத்தில், ஒரு ஜோடி செருப்பும், தொப்பியும் கிடந்ததை கண்டு அவற்றை கைப்பற்றினர்.. ஆடு மேய்க்க சென்ற பானுமதியை யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை.. சடலத்தை கைப்பற்றி, அந்த தொப்பி, செருப்பு யாருடையது என்பதையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.