புனே கார் விபத்து.. சிறுவனை காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்.. திடீரென பறந்த போன் கால்கள்! பரபர
புனே: புனே போர்ஷே கார் விபத்தில் சினிமாவை மிஞ்சும் வகையில் பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக இப்போது சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஓரிரு வாரங்களுக்கு முன்பு நடந்த விபத்து அனைவருக்கும் பகீர் கிளப்புவதாக இருந்தது. குடிபோதையில் காரை இயக்கிய பிரபல தொழிலதிபரின் மகன், பைக்கில் வந்த தம்பதி மீது மோதியுள்ளான்.

இதில் அந்த சிறுவன் தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். இந்த கார் விபத்தில் சிறுவனைக் காப்பாற்ற சினிமாவை மிஞ்சும் வகையில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.
பரபர குற்றச்சாட்டு: இதற்கிடையே இந்த விபத்தில் சிறுவனைக் காப்பாற்ற அரசியல் தலையீடுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது போர்ஷே விபத்தில் சிறுவனைக் காப்பாற்ற ரத்த மாதிரிகளை மாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்களில் ஒருவர் மகாராஷ்டிர அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஒருவரின் வற்புறுத்தலின் பேரிலேயே தடயவியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டதாகச் சம்பந்தப்பட்ட அந்த புனே சசூன் மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார்.
மேலும், மகாராஷ்டிர எம்எல்ஏ சுனில் டிங்ரே, புனே கார் விபத்துக்குப் பிறகு எர்வாடா காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும் வழக்கில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என்று அவர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
அரசியல் தலைவர்கள்: இது தொடர்பாக இளைஞனின் ரத்த மாதிரியை மாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்படும் புனேவின் சசூன் மருத்துவமனையின் டீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மகாராஷ்டிரா மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிப் மற்றும் டிங்ரே ஆகியோர் டாக்டர் அஜய் தவாடேவை சாசூன் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறையின் தலைவராக நியமிக்குமாறு கடிதம் எழுதியிருந்தனர். இதன் காரணமாகவே அவரை தலைவராக நியமித்தோம்" என்று கூறியிருந்தார்.
முஷ்ரிப் மற்றும் எம்எல்ஏ டிங்ரே ஆகிய இருவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் பிரிவைச் சேர்ந்தவர்களாகும். டீன் காலேவின் இந்தப் பேச்சு மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து டீனாக சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்று கூறி காலேவை கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இது மேலும் விவாத புள்ளியாக மாறியுள்ளது.
லஞ்சம்: தவாடே மற்றும் சாசூன் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்ரீஹரி ஹார்னர் ஆகியோர் கடந்த திங்கள்கிழமை புனே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.. கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியைக் குப்பையில் வீசிவிட்டு அதை ஆல்கஹால் இல்லாத ரத்த மாதிரியை வைத்து இவர்கள் மாற்றியுள்ளனர். இதற்காக இரண்டு மருத்துவர்களுக்கும் ₹ 3 லட்சம் லஞ்சமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு மருத்துவர்கள் மற்றும் பியூன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் பரபர: இந்தச் சூழலில் விபத்து தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி சில பகீர் குற்றச்சாட்டுகை முன்வைத்துள்ளது. இந்த விபத்தில் ஆளும் தரப்பு எம்எல்ஏ ஒருவரின் மகனுக்குத் தொடர்பு இருப்பதாகவும் இதன் காரணமாகவே அரசியல்வாதிகளை விபத்தை மூடிமறைக்கத் துடிப்பதாகவும் காங்கிரஸின் மகாராஷ்டிரத் தலைவர் நானா படோலே குற்றஞ்சாட்டியுள்ளார்.
புனேவில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனைக் காப்பாற்ற அவனது தந்தை தொழிலதிபர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். விபத்து நடந்த உடன் அந்த தொழிலதிபர் டாக்டர் தவாடேவை குறைந்தது 14 முறை தொடர்பு கொண்டார்.. வாட்ஸ்அப், வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் ரத்த மாதிரியை மாற்ற அழுத்தம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications