31 சவரன் போச்சே.. அதுவும் ஒரே ஒரு செயின்..அழகரை பார்க்கப் போன ராதாவின் செயினை அடித்து மாயமான நபர்!
ராமநாதபுரம்: மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா முழகத்திற்கிடையே மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதே போல், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது அன்னதானம் வாங்க கூட்டத்தில் நின்ற ராதா என்ற பெண்ணிடம் 31 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். ராதா என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த ஒரே தங்க செயின் 31 சவரன் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில் முக்கிய விழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. இதையொட்டி கண்டாங்கி பச்சைப் பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்புடன் கள்ளழகர் திருக்கோலத்தில், தங்க பல்லக்கில் அழகர் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்
தொடர்ந்து, மதுரை மூன்றுமாவடி, தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையும், நேற்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமும் நடைபெற்றது.

இதனையடுத்து, இன்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர், தல்லாக்குளம் கருப்பண சுவாமி சன்னதி எதிரில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளியதை தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ, "கோவிந்தா" கோஷம் விண்ணை முட்ட, வைகை கரை வந்தடைந்தார். அங்கு கள்ளழகரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்க, தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ''கோவிந்தா'' கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா ஆகியவற்றிலும் அழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கம். அந்த வகையில் நூறு ஆண்டுகளாக பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பின் ஆற்றுப்பாலம் பகுதியில் ஜோடிக்கப்பட்ட ஆயிரம் நான்கு உயரமான சக்கரங்களுடன் 40 அடி உயர தேருடன் வைகை ஆற்று மணலில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பிரம்மாண்டமான தேரை வண்டியூர் வரை இழுத்துச் சென்றனர்
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் பரமக்குடியைச் சேர்ந்த ராதா என்பவர் அழகரை தரிசித்து விட்டு அன்னதானம் வாங்க கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த மர்ம நபர்கள் சிலர் ராதா அணிந்திருந்த 31 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். ராதா அணிந்திருந்த ஒரு செயின் மட்டுமே 31 சவரன் என்பது குறிப்பிடத்தக்கது. நகை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த ராதா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications