ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை பார்த்ததும் திரு திருவென முழித்து எஸ்கேப் ஆன ஓபிஎஸ்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பெயரில் மேலும் 4 சுயேச்சைகள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க தயாராக இருந்தார்கள்.. ஆனால் எதற்கும் சரியாக பதிலளிக்க முடியாமல் திரு திருவெனெ முழித்த வேட்பாளர்கள்.. அடுத்த நொடியே எஸ்கேப் ஆனார்கள்.
லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வேட்பு மனு தாக்க செய்ய நாளை ஒரு நாள் தான் இருப்பதால் இன்றே பல முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர்.

அதிமுகவில் இருந்து கழற்றி விடப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இந்த முறை பாஜக கூட்டணியில், ராமநாதபுரம் தொகுதியில் தனி சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதிமுக உரிமை மீட்பு குழு என்ற பெயரில் நேற்றே ஓ பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை ஓ பன்னீர் செல்வம் என்ற பெயரில் இன்னொரு நபர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இதே ஓ பன்னீர் செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், 3 சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். மூன்று பன்னீர் செல்வத்தின் இனிஷியலும் ஓ தான். இதனால் இதுவரை ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அதிமுகவின் உரிமை மீட்பு குழு தலைவரோடு சேர்த்து ஓ பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று ஓ பன்னீர் செல்வம் என்ற பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்த 3 பேரிடமும் செய்தியாளர்கள் பேட்டி எடுப்பதற்காக அலுவலகத்தின் வெளியே காத்திருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்த வேட்பாளர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க தயாராக இருந்தார்கள்.. ஆனால் எதற்கும் சரியாக பதிலளிக்க முடியாமல் திரு திருவென முழித்த வேட்பாளர்கள்.. ஆளை விட்டால் போதும் என அடுத்த நொடியே எஸ்கேப் ஆனார்கள்.
ஏற்கனவே ஓ பன்னீர் செல்வத்திற்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது தனது செல்வாக்கை காட்டுவதற்காக ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்கியுள்ள அவருக்கு இதுவும் ஒரு தலைவலியாக மாறியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிப்பதற்காகவே ராமநாதபுரம் தொகுதியை தேர்ந்தெடுத்து தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்தார்.
ஆனால் அவருக்கு சோதனையாக மேலும் 4 பேர் அதே பெயரில் இனிஷியலில் களம் காண வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வரை வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருப்பதால், வேட்புமனு தாக்கல் முடிவடைவதற்குள் இன்னும் எத்தனை ஓபிஎஸ் வருவார்களோ? தெரியவில்லை.












Click it and Unblock the Notifications