அதிர்ச்சி.. அட்வைஸ் செய்த போலீஸ்காரர் மீது விழுந்த வாள், அரிவாள் வெட்டு.. தமிழகத்தில்தான்!
ராமநாதபுரம்: சாலையில் மது அருந்தாமல் வீட்டில் சென்று மது அருந்துமாறு அறிவுரை கூறிய போலீசாரை வாள், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே அமைந்துள்ளது நரிப்பையூர் கடற்கரை. இங்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு 2 காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது நரிப்பையூர் கடற்கரை சாலையில் அமர்ந்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கும்பலாக மது அருந்தி இருக்கின்றனர். இதனை கண்ட காவலர்கள் அவர்களிடம் சென்று வீட்டில் மது அருந்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். போலீசார் சொன்னதை கேட்க மறுத்த இளைஞர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த கும்பல் குடிபோதையில் மறைத்து வைத்திருந்த வாள், அரிவாள், சைக்கிள் செயின் போன்ற பயங்கர ஆயுதங்களை எடுத்து போலீசாரை தாக்கத் தொடங்கினர். படுகாயங்களுடன் போதை கும்பலிடம் இருந்து தப்பிப் பிழைத்த போலீசார் வசந்த் மற்றும் லிங்கநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாயல்குடி போலீசார் அல் ரசீது, முஹம்மது மசூத், பிலால், முபாரக் அலி, ஜகுபர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.