'காப்பாத்துங்க ஸ்டாலின் ஐயா'.. மழலையின் கதறலை கேட்டு ஓடோடி வந்த திமுக எம்.பி. செந்தில்குமார்.. வாவ்
இதய நோயால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த சிறுவன் முதலமைச்சருக்கு கோரிக்கை
ராமநாதபுரம்: தனது அம்மா அப்பாவிடம் காசு இல்லையென்றும், எனவே தன்னை காப்பாற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராமநாதபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
சமீப நாட்காளக கொடிய உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனமெடுத்து அவர்களின் சிகிச்சைக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த சிறுமி டான்யா அரிய வகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். சிறுமியின் மூன்றரை வயதில் முகத்தில் சிறு கட்டி உருவாகியுள்ளது. சாதாரண ரத்த கட்டி என்று பெற்றோர் கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கின்றனர்.
ஆனால் அடுத்த சில நாட்களில் சிறுமி டான்யாவின் முகம் ஒரு பக்கமாக சிதைய தொடங்கியுள்ளது. கிட்டதட்ட 6 ஆண்டுகளாக டான்யாவின் பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கியுள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படி இருக்கையில், சிறுமியின் அழுகுரல் சோஷியல் மீடியாக்களின் வாயிலாக முதலமைச்சருக்கு எட்டியது. இதனையடுத்து சிறுமியின் சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்வதாக அறிவித்தது.

முதல் அறுவை சிகிச்சை
அதன்படி இரண்டு கட்ட அறுவை சிகிச்சை முடிந்து தற்போது சிறுமி நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து இதேபோன்ற கோரிக்கை ஒன்று மேலெழுந்திருக்கிறது. அதாவது ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி சண்முகபுரம் பகுதியில் ரஞ்சித்-சரண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் கஜன் எனும் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே மருத்துவ பரிசோதனையில் குழந்தை கஜனின் இதயத்தில் பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஆயிரத்தில் ஒரு குழந்தை இது போன்ற பிரச்னையுடன்தான் பிறக்கிறது. ஆனால் சிறுவன் கஜனுக்கு இரண்டு பிரச்னைகள் இருந்திருக்கிறது.

இதயத்தில் பிரச்னை
ஒன்று, கஜனின் இதயத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை. இரண்டாவது ரத்த குழாய்களில் உள்ள பிரச்னை. முதல் பிரச்னையை பெற்றோர்கள் முடிந்த அளவுக்கு எதிர்கொண்டார்கள். தெரிந்த இடத்தில் கடன் வாங்கி, நகைகளை விற்று, பிரமுகர்களிடம் உதவி கேட்டு என எல்லா வகையிலும் பணத்தை தயார் செய்துள்ளனர். ஆனால் இந்த பணத்தில் பாதி சிறுவனின் பரிசோதனைக்கே செலவாகியுள்ளது. இருப்பினும் முயற்சியை கைவிடாத பெற்றோர் எப்படியோ பணத்தை திரட்டி சிறுவனில் இதயத்தில் உள்ள ஓட்டையை அடைத்துள்ளனர். இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்த நாள் முதல் தொடங்கிய ஓட்டத்தில் பெற்றோர்களின் கால்களும் மனதும் இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் முற்றிலுமாக சோர்வடைந்துவிட்டது.

இரண்டாவது ஆப்ரேஷன்
சரி ஒன்றை முடித்துவிட்டோம் மீதி இன்னொன்றுதான் இருக்கிறது எனவே இரண்டாவது அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆகும் பணத்தை சற்று பொறுமையாக திரட்டிக்கொள்ளலாம் என்று இருந்திருக்கின்றனர். அப்போதுதான் மருத்துவர்கள் அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளனர். அதாவது சிறுவனுக்கு 5 வயது ஆவதற்குள் இரண்டாவது அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும். தவறினால் சிறுவன் உயிர் பிழைப்பது கஷ்டமாகிவிடும் என்று கூறியுள்ளனர். இதனை கேட்ட பெற்றோருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்போதுதான் ஓடி ஓடி களைத்து போயிருக்கிறோம். மீண்டும் உடனே ஓட சொன்னால் என்ன செய்வது என்று யோசித்து வந்துள்ளனர்.

வேண்டுகோள்
அப்போதுதான் சிறுவன் கஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோவில், "என் பெயர் கஜன். பெருநாழியில் இருக்கேன். என்னைய ஸ்டாலின் ஐயாதான் காப்பாத்தனும். எனக்கு ஆப்ரேஷன் பண்ண அப்பா அம்மாட்ட காசு இல்ல" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியநிலையில் தர்மபுரி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் சிறுவனின் விவரங்களை கேட்டு பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர் செந்தில்குமார் எம்பி பல குழந்தைகளுக்கு உதவி செய்திருக்கிறார் என்பதால், கஜனின் விவரங்களை கேட்டு பெற்றிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications