ஆடி அமாவாசை! ராமேஸ்வரத்தில் குவிய தொடங்கும் பக்தர்கள்.. ராமநாதபுரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு லீவு
ராமநாதபுரம்: சந்திரனின் வீடாக இருக்கும் கடகத்தில் சூரியன் சஞ்சரிப்பதைதான் ஆடி மாதம் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதம் இறை வழிப்பாட்டிற்கான மாதமாக கருதப்படுகிறது. அதேபோல ஆடி அமாவாசையான இன்று, ராமேஸ்வரத்தில் பக்தர்கள் அதிக அளவு குவிந்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு கூழ் வார்த்து வழிபாடு நடத்தப்படுகிறது. இதே வைணவ சமயத்தை பொறுத்த அளவில், உயிரிழந்த தங்கள் முன்னோர்களுக்கு இந்த மாதத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. இதை பித்ரு வழிபாடு என்று கூறுகின்றனர். அதாவது, தாத்தா, பாட்டி, கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி என 12 பேருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதிலும், யார் என்ன? என்று விவரமே தெரியாத ஆதரவற்றவர் ஒருவருக்கும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.

எனவே இன்றைய தினம் நீர் நிலைகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட தொடங்கியுள்ளனர். ராமநாதபுரத்தை பொறுத்த அளவில் ராமேஸ்வரம், தேவிப்பட்டணம், சேதுக்கரை பகுதிகளில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கில் இங்கு பக்தர்கள் கூட இருக்கின்றனர். எனவே பாதுகாப்பு பணிக்காக சுமார் 800க்கும் அதிகமான போலீசார் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல ராமநாதபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பை ஈடு செய்ய ஜூலை 22ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications