படிக்க பணம் கேட்ட பரமக்குடி மாணவி.. சீரழித்த கயவர்கள்.. அதிமுக கவுன்சிலர் உள்பட போக்சோவில் ஐவர் கைது
ராமநாதபுரத்தில் 14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக கவுன்சிலர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டம், கூட்டு பாலியல் வன்கொடுமை, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அதிமுக கவுன்சிலரின் பெயர் சிகாமணி என்பதாகும். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகனாவார். அதிமுகவில் நகர் அவை தலைவராக உள்ளார். பரமக்குடி நகர் மன்ற மூன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் புதுநகரை சேர்ந்த கயல்விழி,45. இவரின் வீட்டின் அருகில் ஒன்பதாம் வகுப்பு மாணவி வசித்து வந்துள்ளார். அந்த மாணவி பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர் மிகவும் கஷ்டப்படுவதாக கயல்விழியிடம் கூறியுள்ளார். அதற்கு தனது முதலாளியிடம் பணம் வாங்கி தருவதாக அந்த மாணவியிடம் கயல்விழி ஆசை வார்த்தைகளை கூறி அதிமுக கவுன்சிலர் சிகாமணியிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது கவுன்சிலர் சிகாமணி அந்த மாணவியை காரில் அழைத்துக் கொண்டு மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த மாணவியிடம் புதுமலர் பிரபாகரன்,42 என்ற பிரபாகரன்,மறத்தமிழர் சேனை கட்சியின் மாநில தலைவர் என்பவரிடம் கயல்விழி அறிமுகப்படுத்தி உள்ளார். அதே தனியார் விடுதியில் பிரபாகரனும் அந்த மாணவியை பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதேபோல் பரமக்குடி மாதவன் நகரை சேர்ந்தவர் ராஜா முகமது ,36. இவர் பரமக்குடி, பார்த்திபனூர் ஜவுளிக்கடை வைத்துள்ளதுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். ராஜா முகமதுவும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் மூவரும் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் அந்த மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மூன்று ஆண்களுடன் வலுக்கட்டாய உறவு கொள்வதற்கு கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகிய இரு பெண்களும் உடந்தையாக இருந்துள்ளனர். அந்த மாணவியை விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த பின்பு பிரபாகரன் பணம் தர மறுத்துள்ளார். இதுகுறித்து கயல்விழி மற்றொரு நபரிடம் போனில் பேசிய ஆடியோ ஒன்று சிக்கியது.

இதையறிந்த மாணவியின் பெற்றோர் காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரையிடம் புகார் அளித்தனர். இந்த ஆடியோ அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகாராக சென்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் பரமக்குடி குற்றப்பிரிவு போலீசார் 24 மணி நேரத்தில் அதிமுக கவுன்சிலர் சிகாமணி, புதுமலர் பிரபாகரன் என்ற பிரபாகரன், ராஜா முஹம்மது, கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகிய ஐந்து பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டம், கூட்டு பாலியல் வன்கொடுமை, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். படிக்க பணம் கேட்ட பள்ளி மாணவியை அரசியல்வாதிகளுக்கு விருந்தாக்கிய மூன்று பெண்களும், இளம் சிறுமியை சூறையாடிய மூன்று ஆண்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications