பிரதமர் நரேந்திர மோடியின் நகத்தில் உள்ள அழுக்கின் பக்கம் கூட திமுக வரவே முடியாது.. அண்ணாமலை காட்டம்
ராமநாதபுரம்: பிரதமர் நரேந்திர மோடியின் நகத்தில் உள்ள அழுக்கின் பக்கம் கூட திமுக வர முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கவும் லஞ்சம் ஊழலை எதிர்த்தும் 110 நாட்களுக்கு பாதயாத்திரை செல்கிறார்.

அவர் வரும் ஜனவரி 20ஆம் தேதிக்குள் இந்த பாதயாத்திரை திட்டத்தை முடித்துவிட்டு பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த பார்க்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அவர் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
ஒவ்வொரு தொகுதிகளிலும் பாஜக நிகழ்த்திய சாதனைகளை விளக்கி பேசுகிறார். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த ஐந்துமுனை பகுதியில் என் மண் என் மக்கள் எனும் பாதயாத்திரைக்காக சென்றார். அவருக்கு பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய அண்ணாமலை தமிழகத்தில் 27 மாதங்களாக ஊழல் நிறைந்த ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர், தனது மகன் மற்றும் மருமகனுக்காகவே ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். டாஸ்மாக் கடைகள் மூலம் அதிக வருவாய் ஈட்ட நினைக்கும் தமிழக அரசு கள்ளுக்கடையை திறக்க வலியுறுத்தும் பனை விவசாயிகளை கண்டு கொள்வதில்லை.
பாஜகவை எப்போதும் குறை கூறி வரும் திமுக அரசு பிரதமர் நரேந்திர மோடியின் நகத்தில் உள்ள அழுக்கின் பக்கம் கூட வர முடியாது என கடுமையாக விமர்சித்திருந்தார். பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து முதல்வர் ஸ்டாலின் திமுக இளைஞரணி கூட்டத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவர் பேசுகையில் அண்ணாமலை மேற்கொள்வது பாதயாத்திரை அல்ல, பாவயாத்திரை! 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்ததற்கும் தற்போது மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்திற்கும் சேர்த்து மக்களிடையே பாவ மன்னிப்பு கேட்கும் யாத்திரையாகவே நான் பார்க்கிறேன் என்றார். மேலும் "இந்தியா" பெயரை சொன்னாலே சிலர் பதறுகிறார்கள், மிரளுகிறார்கள் என பிரதமர் மோடியை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும் முதல்வர் பேசுகையில் மத்திய பிரதேசம் போனாலும் சரி அந்தமான் போனாலும் சரி திமுகவை பற்றிதான் பேசுகிறார் பிரதமர். ஏதோ பாஜக வெல்ல முடியாத கட்சி போல் பயம் காட்டி கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னார், தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படும் விவகாரத்திலும் குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் தாக்கப்படும் விவகாரத்திலும் தான் தலையிட்டு தீர்வு காண்பேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட இறக்கவிட மாட்டோம் என்றார். ஆனால் 2017ஆம் ஆண்டு தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்டோ என்ற மீனவர் பாஜக ஆட்சி காலத்தில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னையில் ஒரு விழாவில் நரேந்திர மோடி பேசிய போது எங்கள் ஆட்சியில் 1600 பேர் விடுவிக்கப்பட்டார்கள், 313 மீனவ படகுகள் விடுவிக்கப்பட்டன என்றார். அப்படியென்றால், 1600 பேர் கைது செய்யப்பட்டார்கள்தானே, அது போல் 313 மீனவ படகுகள் சிறை பிடிக்கப்பட்டதுதானே. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக ஆட்சி பதவியேற்றது முதலே அக்கட்சிக்கும் அண்ணாமலைக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications