தமிழர்கள் என்றாலே மத்திய அரசுக்கு ஏன் கசக்கிறது? கச்சத்தீவை மீட்கணும்! ஸ்டாலின்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பேராவூர் அருகே ரூ 134 கோடி மதிப்பிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் 50,752 பயணிகளுக்கு ரூ 42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே மத்திய அரகசுக்கு ஏன் கசக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.
முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கள ஆய்வு மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து சாலை மார்க்கமாக மானாமதுரை அருகே இடைக்காட்டூருக்கு சென்றார். அங்கு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் 1.55 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து ராமநாதபுரத்திற்கு முதல்வர் புறப்பட்டுச் சென்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதையடுத்து இன்று காலை மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பேராவூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு ரூ 134 கோடி மதிப்பில் 150 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அது போல் ரூ 176 கோடியில் 109 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் 50,752 பயனாளிகளுக்கு ரூ 42.68 கோடி மதிப்பிலான உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் இந்த விழாவில் அவர் பேசுகையில் ராமநாதபுரம் தண்ணீரில்லாத பகுதி என்ற நிலை மாற்றப்படும். விரிவுப்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தால் ராமநாதபுரம் பகுதியில் 3.82 லட்சம் பேர் பயனடைவார்கள். இனி தண்ணீர் பஞ்சம் இருக்காது ராமநாதபுரம் மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு பொறியியல் கல்லூரியை முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை ரூ 616 கோடியில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ராமநாதபுரம் தனுஷ்கோடி மேம்பாட்டு திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வந்தது. ராமநாதபுரம் அனைத்து மதத்தினரும் சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் மண்ணாக திகழ்கிறது.
ராமநாதபுரம் பகுதியில் 6 வழித்தடம் ரூ 30 கோடியில் மேம்படுத்தப்படும். ராமநாதபுரத்தில் 2.36 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் 4 வழிச்சாலை, ரூ 30 கோடி 4 வழித்தடமாக மாற்றப்படும். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சேதுபதி நகர் என பெயர் சூட்டியவர் கருணாநிதி. ராமநாதபுரத்தில் 4 ஆண்டுகளில் ரூ 3000 கோடியில் 46,770 திட்ட பணிகள் நடந்துள்ளன. இலங்கை படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. மத்திய அரசுக்கு தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஏன் கசக்கிறது. தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications